செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எந்தன் தேசத்தின் குரல்...

ஏப்ரல் 26 அன்று நடந்த காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உள்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.இந்த செய்தியை படித்து கடந்து விட்டவர்களுக்கு......

ஒவ்வொரு முறையும் போரில்,எல்லையில்,நாட்டுக்குள் என்று உயிர் துறக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி படிக்கும் போது கண்கள் பனிப்பதுடன் மட்டுமே  நாட்டுப்பற்று நின்றுவிடுகிறது.இந்த முறையும் அப்படிதான்!ஆனால் என் வயதையொத்த ஒரு பெண் நாட்டுக்காக கைபெண்ணாய் ஆனால் முகத்தில் ஒருவித ஏற்புதலுடன் ;என் மகள் வயதிலுள்ள ஒரு குழந்தை அப்பாவின் சவப் பெட்டிக்கு அருகில் எப்போதும் போல் சிரிப்புடன்!இந்தக் காட்சி மனதிற்குள் வலியாய் ....உயிருக்குள் ரணமாய்...!

உயிர் நீத்தது மூன்று பேர்!இந்த ஒருவனை நான் குறிப்பிட்டு எழுத காரணம்...என் தாய்மொழி பேசும் ஒருவன் 22 மொழிகளை உள்ளடக்கிய பரந்த எம்  தாய்மண்ணிற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறான்.இவனைப் போன்றோர்களை யாம் எப்படி கவுரவிப்போம்?

இந்திய சுதந்திரத்தைப் பற்றி நினைத்தாலே "தண்ணீர் விட்டா வளர்த்தோம் ; எங்கள் செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம்!" என்ற வீர உரை நெஞ்சத்தை பிசையும்.அப்படி செந்நீர் விட்டு வளர்த்தெடுத்த தேசம் அரசியல்வாதிகளிடம் மீண்டும் அடிமையாயிருக்கையில் இன்னும் தம் செந்நீரை சிந்தி எம் சுதந்திரத்தை உறுதி செய்யும் எம் உடன்பிறப்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தாரின் தியாகத்திற்கும் எப்படி மரியாதை செய்வோம்?எல்லையில் எதிரியை விரட்டியடித்து தேவைப்பட்டால் தம் இன்னுயிரையும் தந்து நம் அமைதி வாழ்வை உறுதி செய்யும் வீரனுக்கு நாம் செய்யப் போகும் கைம்மாறு என்ன?

நாட்டுக்குள் சுற்றும் எதிரிகளான லஞ்சம்,ஊழலுக்கு துணை போகாமல், விளை  மண்ணை வீட்டு நிலமாக மாற்றாமல்,குடிப்பழக்கத்தை விடுத்து பின் வரும் தலைமுறைகளை காப்பாற்றி,மற்ற உயிர்களுக்கு மதிப்பளித்து, சிறியதேயானாலும் தானம் அளித்து வாழ்ந்தோமேயானால் நாமும் நாட்டுப்பற்று உடையவர்களே!சிந்தனை செயல்களாகும்;செயல்கள் பழக்கங்களாகும்;பழக்கங்கள் ஒரு கலாச்சாரமாகும்;ஒரு கலாச்சாரம் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுத்து பாதுகாக்கும்!

கரிகாலனும், இராச ராசனும் வாழ்ந்த எம் புனித தேசத்தில் கரை(றை ) வேட்டிகளே வாழ்கிறார்கள்!நல்லவர்கள் உயிர் தந்து காக்கும் நம் தேசத்தை கொள்ளையர்கள் கையில் விட்டு வைக்காமல் இனி அரசியலை நம் குழந்தைகளுக்காவது சொல்லிக்கொடுப்போம்;நேர்மையான தேசத்தை உருவாக்க விதைப்போம் நெஞ்சில்!



1 கருத்து:

  1. என் மனதிலும் ஆழப்பதிந்து வலியை உண்டாக்கியது அந்தக் காட்சி. சுற்றி நின்று கதறி அழுபவர்களை கண்டுகொள்ளாது, முகத்தில் சிறு புன்னகையோடு, எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு, நின்றிருந்த திருமதி. இந்து முகுந்தின் புகைப்படம் என் உள்ளத்தை நெகிழச் செய்தது என்பது மிகைப்படுத்தல் அல்ல. அப்படி ஓர் சூழலில், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, தலையில் அடித்து, தலிவிரிக்கோலத்தில் கதறி அழும் ஒரு செய்கையை மட்டுமே கண்டு பழகிய உலகம், இவள் புன்னகையை தவறாக மொழி பெயர்த்திடுமோ என்று என் உள்ளம் பதறியதும் உண்மை. இந்த மன உறுதி, துயரை எதிர்கொள்ளும் பக்குவம், என்று இந்த மனைவி வெளிப்படுத்திய அவளின் தன்மை, மேஜர். முகுந்தின் தியாகத்தை இன்னும் மேம்படுத்தியது. கணவன், இறந்து போதித்தது ஒரு பாடம், மனைவி வாழ்ந்து போதிப்பது மற்றொரு முக்கிய பாடம். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி” என்று நம்மைக் கண்டு வருந்தினான் பாரதி. அவன் வருத்தத்தை சற்றேனும் போக்குகிறாள் இந்து. இறைவன் அருள் இக்குடும்பத்தைக் காக்கும். இவளிடமிருந்து நாம் நெஞ்சுரம் கற்போம்.

    பதிலளிநீக்கு