செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நாகரீகம்......?


கடந்த ஏப்ரல் 30 அன்று மும்பையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.அதில் வாக்களித்த திரைப்பட பிரபலங்கள் தாம் வாக்குப் பதிவு செய்ததன் அடையாளமான மை வைத்த நடுவிரலை பத்திரிக்கைகாரர்களுக்கும்,புகைப்படக்கரர்களுக்கும் காண்பித்தனர்.அவற்றை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கவும் செய்தனர்.அதைப் பார்த்து நான் அதிர்ச்சி மட்டுமல்ல கோபமும் கொண்டேன்.மும்பையில் பெரும்பாலான நகரவாசிகள் அனைவரும்தான் வாக்குப் பதிவு செய்துள்ளனர்,இவர்கள் வாக்களித்ததில் மட்டும் அப்படியென்ன சிறப்பு...என்பதல்ல என் கோபம்!

அவரகள் வாக்களித்த விரலை மட்டும் உயர்த்தி(மற்ற விரல்களை மூடியபடி)காண்பித்த விதம்!உலகில் பெரும்பாலானோர் இதன் அர்த்தத்தை நன்கு அறிவர்.வாக்குப் பதிவு செய்ததன் அடையாளகமாக வேண்டுமானால் கொள்ளலாமே தவிர நாகரீகமான செயலாகக் கருத முடியாது.

Celebrities என இவர்களைப் பின்பற்றும் இளைஞர்கள் கேட்கலாம் இதில் என்ன தவறு?என்று.மை வைத்த விரலை மட்டும் காண்பிக்க நினைத்தோம் என்று தர்க்கமும் செய்யலாம்!வரும் நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் மாநிலங்களில் இதையே பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இளமையின் அடையாளங்களாகக் கொண்டு பின்பற்றப்படும் இத்தகைய செய்கைகளை நான் குறைகூறவில்லை,அது பிறரைப் பாதிக்காத வரை!! இந்த பிரபலங்கள் யாரை நினைத்து விரலை உயர்த்தினர் என்பது தெரியவில்லை.தாம் வாக்களித்த அரசியல்வாதியின் பிரதிவாதிக்கா....?இல்லை...நெடுநாட்களாக திட்டம் அமைத்து,உழைத்து நாடு முழுதும் தேர்தல் நடத்தும் ஆணையத்திற்கா.....?

சின்ன சின்ன விஷயங்களில் கூட தங்களைப் பின்பற்றும் ரசிகர்கள் இருக்கையில் இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கலாமே!

இந்தியா தொழில்துறை,பொருளாதாரம்,வானவியல் ஆராய்ச்சி என்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கையில் நமது தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு செய்பவர்களின் அங்க அடையாளங்களைப் பதிவு செய்யும் biometric சாதனங்களை பயன்படுத்தலாமே!

வழக்கம் போல்....தேர்தல்...!

பிரச்சாரம் முடிந்ததும்
'நல்ல கலருப்பா' ,
'என்ன குரல்'
எனும் கொள்கைப் பேசிக்
கலையும் கூட்டம்!

யாராவதொரு
'அடுத்த பிரதமர்'
'நன்றி வணக்கம்' எனத்
தமிழில் பேச
ஒருவரிப் புரிந்ததில்
புல்லரித்துப் போகும் தொண்டர்கள்!

ஏதோப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடியப் பட்டியல்
போகுமிடமெல்லாம் பறையடிக்கப்படும்
தான் மட்டுமே தலைவனென்று
நினைவுப்படுத்தப்படும்!
அல்லது
அறிக்கைவிட்டு அனுதாபம் தேடும்!

சுவற்றில்
இடம்பிடிக்கப் போட்டி!
மக்கள் மனதில் அல்ல!

தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்குமே அகப்படவில்லை!!

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நரை

வழக்கம் போல்
கண்ணாடிப் பார்க்கிறேன்....

வெயிலில் ஒளிர்ந்ததற்கு அடையாளமாய்
முகத்தில் கருமை சுவடுகள்
முல்தானிமெட்டி போட்டு வெள்ளையாக்கிடவேண்டும்
மனதில் தீர்மானித்துக்கொண்டேன்!

அடுத்து.....

தச்சன் இழைத்த
மிச்ச மரச்சுருலென
நெற்றி விழுந்த கேசத்தை
விரலால் கோதி பெருமிதம் கொள்கையில்
அதென்ன.....

வான் மறைக்க விழையும்
பொழியாத மேகத்தில் சிறு
மின்னல் கீற்றென.....நரைமுடி!

இதயத்தில் இடி இறங்கியது!

அனிச்சை செயலாய்
கை அதை களையெடுக்க
பின்புதான் நினைவு வந்தது....
ஒன்றைஎடுக்க நிறைய வரும்
அமுதசுரபி நரைமுடியென யாரோ சொன்னது....!

நாட்கள் அதிகமாக
நரைமுடியும் இரண்டாய்...நான்காய்....!

காதோரத்தில்
நான்கு வெள்ளிமுடிகள்
பிறர் கவனத்தைக் கவர்கிறது
என்ற இறுமாப்பில் சில நாட்கள்...!

நான்கு வெள்ளிமுடிகளாலேயே
பிறரிடம் மரியாதை
அளவுக்கதிகமகிறதோ.....?
என்ற கவலை வர.....

வெள்ளிமுடியை
கார்மேகமாய் மாற்ற
ஏதோ ஒருசாயம் பூச.....
பூச வேண்டிய முடியின்
எண்ணிக்கை வளர்பிறையாய்....!

இப்போதெல்லாம்
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!!

திங்கள், 6 ஏப்ரல், 2009

காந்தி வழியில் நான்...??

வன்முறையில் இஷ்டமில்லை
என்றாலும்
வன்முறை நடக்கும்போது தடுக்காமல் வேடிக்கை
பார்த்து செல்லும் மக்களில்....
நானும் ஒருவன்!

உயிர்களைக் கொல்வது பாவம்
என்ற எண்ணம் இருந்தாலும்
உணவகங்களில் உறுத்தலில்லாது மாமிசம்
உண்ணும் ஜீவன்களில்
நானும் ஒருவன்!

காந்தியே....
புகைப்படத்திலிருந்து நீ
எனை குறுகுறுவெனப் பார்த்தாலும்....
எண்ணத்துக்கும் நடைமுறைவாழ்வுக்கும் உள்ள
இடைவெளியில் பழகிப்போன
பெரும்பான்மை சராசரிகளில்
நானும் ஒருவன்!

நீ....
உபயோகித்த ஒற்றை ஆடை
தடி, கண்ணாடி
இவைகளே
சுத்திக்கடியில் சிக்கி
விலைபோய் விட்டன!

நல்லவேளை....

உன் கொள்கைகளோ சிந்தனைகளோ
லாபம் தரும் ஏலப் பொருளாகவில்லை!

உன் வழிவந்தோரும்
உன் பெயரில் அரசியல் பிழைத்தோருமே
கவலைப்படாத அவற்றை
பின்பற்றுவதால் லாபமில்லை என்ற
தனிமனித சிந்தனையே மேலோங்கி நிற்கையில்....

ரூபாய் நோட்டில் பார்க்கும்
உன் சிரித்த முகம் கூட....
எங்களை எள்ளி நகையாடுகிறது!

எனினும்
வெட்கமின்றி மகிழ்கிறோம்
உன் சிரிப்பைக் கண்டு!












தன்னம்பிக்கை

வண்ணங்களை
சலவை செய்ய
சம்மதிப்பதில்லை
வானவில் மழையிடம்!

முட்களில்
அமர்ந்திருக்கும்போது
சிரித்த ரோஜா
பறித்ததும் வாடியது

இரைகளுக்காக
இறக்கைகளைப்
பறிகொடுப்பதில்லை
எப்போதும் பறவைகள்!

வீழந்ததற்காகத்
தேங்கிவிடுவதில்லை
ஒருபோதும்
அருவி!

நடப்பதற்கும்
கடப்பதற்கும்
பாதைகள் எதற்குப் புதிதாய்
பாதங்கள் போதும்!