வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ரியாலிட்டி ஷோ-வின் கலாச்சார சீர்கேடு

தொலைக்காட்சி என்றாலே புதுப்பாடல்கள்,தொடர்கள்,பழைய படங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் நல்ல பாடகர்,நடனக்கலைஞர் என்று மிகச்சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க 'ரியாலிட்டி ஷோ' அறிமுகப்படுத்தப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.இதை கண்டு கொண்ட மீடியா துறையினரும் மக்களுக்கு பிடித்ததைக் கொடுக்க முடிவு செய்து எல்லாவற்றிற்கும் ரியாலிட்டி ஷோ நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

ரியாலிட்டி ஷோ நடத்துவது தவறு என்பதற்காக நான் எழுதவில்லை.எதற்காக நடத்துகிறார்கள் என்பதை மக்களும் யோசித்து பார்க்க வேண்டும்.இதுவரை நடந்துகொண்டிருக்கும் 'ரியாலிட்டி ஷோ'க்களைப் பார்க்கும்போது,சிறந்த பாடகர்,நடனக்கலைஞர்,சிறந்த நகைச்சுவைக்கலைஞர் என்று கலைத்துறைக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.இவையும் ஒருவகைத் திறமைத் தேடல்தான் என்றாலும் கூட,நம் நாட்டில் எத்தனை பேர் கலைத்துறையில் மட்டுமே உள்ளனர்?ஏன் வேறு எந்தத் துறையிலுமே திறமையானவர்களைத் தேடி அறிமுகப்படுத்தவேண்டிய அவசியமே இல்லையா...?

கடந்த ஜூலை அன்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் 'பேச்சுலரெட்' என்ற ரியாலிட்டி ஷோவின் முடிவை தற்செயலாகக் காண நேர்ந்தது.அந்நிகழ்ச்சியின் அம்சம் என்னவென்றால்,ஒரு பெண் தனக்கான ஆண்மகனை 'பல'வழிகளில் தேர்ந்தெடுப்பதுதான்!அதையே சில திருத்தல்களோடு 'ராக்கி கா சுயம்வர்' என்ற பெயருடன் என்.டி.டி.வி நடத்தியது எனக்கு சிறு அதிர்ச்சிதான்!எவற்றிற்குதான் 'ரியாலிட்டி ஷோ' என்பது இல்லையா?

அதேபோல் அமெரிக்க தொலைக்காட்சியின் பிரபலமான 'தி மொமென்ட் ஆப் ட்ருத்' எனும் நிகழ்ச்சியின் தழுவல்தான் நம் ஊர் ஸ்டார் பிளஸ் நடத்தும் 'சச் கா சாம்னா'.இதில் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்னே,அவர்களை மயக்க நிலையில் ஆழ்த்தி, ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கேள்விகளுக்கு 'பாலிகிராப்' கருவி(பதில் கூறும் பொது இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுதல்களை வைத்து உண்மையா பொய்யா என்பது தெரிந்துவிடும்) மூலம் உண்மையான பதில்களைப் பெற்று பதிவு செய்து கொள்ளப்படும்.பின் நிகழ்ச்சியில் அமர்ந்ததும் அதே கேள்விகள் கேட்கப்படும்.பின் இரு பதில்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மையான பதில்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தரப்படும்.நல்ல நிகழ்ச்சிதானே என்கிறீர்களா?கேள்விகள் அனைத்தும் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத,உறவுகளை சிதைக்கும் அந்தரங்கங்கள்!பணத்திற்காக எத்தகைய பதிலையும் கூறும் மனப்போக்கை தூண்டும் ஒரு நிகழ்ச்சி!

'டேட்டிங் இன் தி டார்க்' என்று கூட ஒரு நிகழ்ச்சி அமெரிக்காவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.அதாவது ஒருவரையொருவர் சந்தித்திராத ஆண்கள் மற்றும் பெண்களுக்குள் இருட்டில் நடக்கும் விஷயங்கள்.இதைத்
தழுவிய நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகாமல் இருந்தால் சரி!


இதிலெல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நம் ஊர் தொலைக்காட்சிகள் ஏன் 'ஸ்பெல்லிங் பீ' போன்ற நல்ல நிகழ்ச்சிகளை பின்பற்றத் தவறிவிட்டன?எங்கோ ஒரு மூலையில் ஒன்றிரண்டு குழந்தைகள் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வெளிநாடு சென்று வந்தனர் என்று கேள்விப்படுவதை விட இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி,தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாமே!குழந்தைகளிடம் மொழிப்பற்றை வளர்க்க,கற்பனைத்திறத்தை அதிகரிக்க,ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர,பொதுப்பணிகள் செய்ய,சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுக்க,சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்க,அவலத்தில் வாழும் மக்களுக்கு உதவ,ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவரை அடையாளம் காண என்று நம் நாட்டில் மக்களுக்கு தெரிவிக்க,பங்குபெற வைக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.ஏன் அரசியலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மக்கள் யாருக்கு ஒட்டு போடுவது என்ற தீர்மானத்திற்கு வர உதவலாம்.அதை விடுத்து நாகரீகம் என்ற பெயரில் தேவையில்லாத விஷயங்களுக்கும்,பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த 'ரியாலிட்டி ஷோ'க்களை என்னவென்று கூறுவது...?தமிழ்நாட்டில் ஒரு தனியார் தொலைகாட்சி மட்டும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மொழிப்பற்றை வளர்க்கும் விதமாக 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்று நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் சற்று ஆறுதலான விஷயம்!


ஆங்காங்கே கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.ஆனால் அவற்றை நாட்டின் மிக முக்கியப் பிரச்சனைகளுக்கு மக்களின் கருத்து என்ன என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் விதமாக நடத்தினால் இன்னும் சிறப்பாயிருக்கும்!