செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பசுமைக்கு மாறுவோம்!


இன்றைய தினங்களில் நாம் 'Go Green' என்ற வார்த்தையை அதிகளவில் கேட்கிறோம்.ஆனால் அதைபற்றிய விழிப்புணர்ச்சியோ பாலிதீன் பைகளை உபயோகிக்காமல் சணல்,நார் போன்றவற்றால் உருவாக்கப்படும் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்ற அளவில் மட்டுமே உள்ளது.உண்மையில் நாம் பயன்படுத்தும் வாகனங்கள்,வீட்டு சாதனப் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வெளிவிடப்படும் நச்சு வாயுக்களால் நாம் வாழும் பூமி வெப்பமடைகிறது.இதனால் தட்ப ,வெப்ப நிலைகளிலும் மாறுதல் ஏற்பட்டு உலகம் வெப்பமயமாதல் (Global Warming) ஏற்படுகிறது.எனவே இயற்கையை மாசுபடுத்தாமல்,இயற்கையை அழிக்காமல் வாழ வேண்டும் என்பதைத்தான் 'பசுமைக்கு மாறு'(Go Green) என்கிறோம்.நாம் தினசரி வாழ்வில் ஒருசில விஷயங்களை கடைபிடித்தாலே உலகம் மேலும் வெப்பமடைவதை தடுக்க முடியும்.

1.மின்விளக்குகளை மாற்றுங்கள்:
நாம் பயன்படுத்தும் மின்விளக்குகளால் வெளிவிடப்படும் கார்பன் இரண்டு கார்களில் இருந்து வெளிவிடப்படும் கார்பனுக்கு சமம்.எனவே உங்கள் மின்விளக்குகள் ஃ ப்ளோரசென்ட்(fluorescent) வகையை சார்ந்ததாக இருக்கட்டும்.இது உங்கள் மின்சாரக் கட்டணத்தை குறைக்கவும் செய்யும்.

2.'Energy Star' தரம் கொண்ட பொருட்களை வாங்குங்கள்:
பல மில்லியன் கார்கள் வெளிவிடும் புகை எப்படி வாயுமண்டலத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதிப்படையச் செய்கிறதோ, அதையேதான் நீங்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிகளும், துணி துவைப்பான்களும், தொலைகாட்சிப் பெட்டியும் செய்கின்றன.எனவே இவற்றை பயன்படுத்தும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இணைப்பை முற்றிலுமாக துண்டித்து விடுங்கள்!இப்பொருட்கள் புதிதாக வாங்கும் பட்சத்தில்,முடிந்தவரை 'Energy Star' தரம் உள்ளதா என்று பார்த்து வாங்குவது இன்னும் நலம்.ஏனெனில் அவை குறைந்த அளவிலான நீரை பயன்படுத்துகின்றன;மிகக் குறைவான கதிர்களை வெளிவிடுகின்றன.

3. குளியல் நேரத்தை சுருக்குங்கள்:
நம் நாட்டில் சில பகுதிகளில் தண்ணீர் பஞ்சமும், சில பகுதிகளில் அதிகளவில் நீர் வளமும் இருந்து வருகிறது; பற்றாக்குறையான பகுதிகளில் வாழும் மக்கள் ஒரு வாளி நீரில் ஒரு தினத்தை முடிக்க வேண்டிய அவசியத்திலும், வளமான நீர்ப்பரப்பில் வாழும் மக்கள் குளிப்பதற்கே 75 முதல் 100 காலன் நீரை உபயோகிக்கின்றனர்.எனவே நீரை வீணாக்காமல் நீர் வசதியில்லா கிராமங்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதன் மூலம் நாட்டின் எல்லாப் பகுதிகளும் சமச்சீர் வளம் பெற்று பசுமையாகக் காணப்படும். அதற்கு முதலில் உங்கள் குளியல் நேரத்தில் 5 நிமிடங்களுக்கு செலவிடப்படும் நீரை குறையுங்கள்; நிமிடத்திற்கு 2.5 காலனுக்கு குறைவான நீரை வெளியேற்றும் நீர்க்குழாய்களைப் பயன்படுத்துங்கள்.நீர்க்குழாய் உங்கள் வாளியை நிரப்புவதற்கே 20 நிமிடங்கள் பிடிக்கும்போது உங்களால் அதிகளவு நீரை செலவு செய்ய முடியாது என்பது நிச்சயம்!

4. வடிகட்டிய குழாய் நீரையே குடியுங்கள்:
இன்றைய தினங்களில் மக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரையே காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்; இதனால் பிளாஸ்டிக் உற்பத்திக்காகவும், அவற்றை கடைகளுக்கு கொண்டு வருவதற்காகவுமான செலவுகளைதான் அதிகப்படுத்துகின்றனர்; தவிர பிளாஸ்டிக் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதிலும், மண்ணின் நலனைக் கெடுப்பதிலுமே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.எனவே உங்களை சுற்றியுள்ள, நீங்கள் வாழும் இயற்கையை கெடுக்காத வண்ணம் உங்கள் வீட்டுக் குழாயில் வரும் நீரையே கொதிக்க வைத்தோ அல்லது சுத்திகரித்தோ பயன்படுத்தலாமே!

5. நச்சுத் தன்மையற்றப் பொருட்களை உபயோகித்தல்:
உங்கள் குளியலறையையும்,சமையலறையையும் சுத்தம் செய்வதற்காக நீங்கள் பயன்படுத்தும் பீனைல் போன்றவற்றைத் தவிர்த்து 'eco friendly' என்ற முத்திரையுடன் கூடியப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும்,குழந்தைகளுக்கும்,செல்லப் பிராணிகளுக்கும் எதிர்பாராவிதமாக நடக்கும் விபத்துகளைத் தடுக்கலாம்.முடிந்தால் உங்கள் சொந்த முயற்சியிலேயே தூய்மை செய்யும் பொருட்களைத் தயாரித்துக் கொள்ளலாம்.வெள்ளை வினிகரையும் சமையல் சோடாவையும் கலந்து குளியலறையை சுத்தம் செய்து பாருங்கள்;பளீரென்ற சுத்தத்துடன் பாராட்டும் கிடைக்கும்(பணத்தைமிச்சப் படுத்தியதற்காகவும்) !ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!

6. மறுசுழற்சி முறையில் உபயோகித்தல்:
பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் பொருட்கள் இவற்றின் உபயோகத்தைக் குறைப்பதாலும்,சரியான மறுசுழற்சி முறைப் பொருட்களை(recyclable or reusable) உபயோகிப்பதாலும் சுற்றுப்புறத்திற்கு கிடைக்கும் நன்மைகளோ அளவிட முடியாதது.உதாரணத்திற்கு,கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளையோ அல்லது காகிதப் பைகளையோ உபயோகிப்பதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்கிறோம்.மாறாக உபயோகித்த பிளாஸ்டிக் பைகளை மண்ணில் புதைப்பதன் மூலம் மண்ணின் நீர் மற்றும் இன்ன பிற வளங்களுக்கு தடையாகிறோம்;எரிப்பதன் மூலம் ஓசோனின் ஓட்டையை பெரிது படுத்துகிறோம்.
உயர்தர உணவகங்களிலும்,திருமணம் மற்றும் விருந்துகளிலும் பயன்படுத்தப்படும் காகிதத் துடைப்பான்களுக்குப்(paper napkins) பதிலாக நார்த் துடைப்பான்களை(fiber napkins) பயன்படுத்துவதன் மூலம் ஒரு மில்லியன் மரங்கள் பாதுகாக்கப்படும்.இப்படி மரங்களை வெட்டாமல் காப்பதன் மூலம் 'பச்சை வீட்டு வாயு'வான ஆக்சிஜன் அதிக அளவில் நமக்குக் கிடைக்கும். இதனால் நீங்கள் இயற்கையின் நண்பனாகி விடுகிறீர்கள்.
அரசாங்கமும் 'சுழல் முறைபடுத்தும் குப்பைத் தொட்டி'களை(recyclable dustbin) ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுவர வேண்டும்.இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புட்டிகள்,பழைய அலைபேசிகள்,பழைய மின்சாதனப் பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்தும் விழிப்புணர்ச்சியைப் பெறுவர்.

7. நம் ஊரில் கிடைக்கும் உணவையே உண்ணுங்கள்;
பெரும்பாலான நகர்புறவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள்,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்.அவைதான் சுத்தத்திலும்,அதிக சத்து நிறைந்தவை எனவும் நம்புகின்றனர்.உண்மையில் அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அதிகளவில் காற்று மாசுக்களுடனே கிடைக்கின்றன.எனவே நம் நாட்டில் நம் ஊரில் விளையும் காய்களையும் ,பழங்களையும் சாப்பிடுவதன் மூலம் நம் உடல் நலன்,சுற்றுப்புற நலன் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார நலனும் பெருகும்.

8. மெதுவாக சீராக செல்லுங்கள்:
நீங்கள் நான்கு சக்கர வாகனத்தில் 60 m.p.h- க்கு மேல் செல்பவரா? 60 m.p.h-க்கு மேல் செல்லும் ஒவ்வொரு 5 m.p.h-க்கும் லிட்டருக்கு 15 ரூபாய் அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அதிகமான வேகம் மற்றும் அடிக்கடி வேகத்தடையை அழுத்துதல்(break) இரண்டுமே உங்கள் வாகனத்தின் செயல்திறனை குறைக்கும்.எனவே மிதமான வேகத்தில் ஒரே சீராக செல்வதால் பெட்ரோல் செலவு குறையும்.

9. இருபக்கங்களிலும் அச்சிடுங்கள்:
நீங்கள் வீட்டிலோ,அலுவலகத்திலோ காகிதத்தில் கணினி மூலம் அச்சிடும் போது இரு பக்கங்களிலும் அச்சிடுங்கள்.முடிந்தவரை மின்னஞ்சல் மற்றும் கோப்புகளில் செய்திகளை கணினியிலேயே சேகரித்து வைத்துக் கொள்வது மிக நன்று.

10.மரம் நடுங்கள்:
உங்கள் வீட்டை சுற்றி குறைந்த பட்சம் மூன்று மரங்களையாவது நடுங்கள்.இது உங்களின் வீட்டை குளுமையாக வைத்திருப்பதுடன் கோடைக்காலங்களில் உங்களின் காற்றாடியாக செயல் புரிந்து உங்களின் உங்களின் மின்கட்டணத்தில் 25 சதவிகிதத்தைக் குறைக்கும்.

11.சொந்த மண்ணிற்கேற்ற வாழ்க்கை வாழுங்கள்:
நீங்கள் பூச்செடிகளையும்,காய்கறிச் செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வமுடையவராக இருந்தால் உங்கள் ஊர் மண்ணின் வளத்தில் எந்த செடிகள் பயன்தருமோ அதையே வளர்ப்பதன் மூலம் அதிக உரங்களையோ,நீரையோ பயன்படுத்த அவசியமிராது.

திங்கள், 29 மார்ச், 2010

கல்வி சீர்திருத்தத்தின் அவசியம்!!

நம் முதல் பாரதப் பிரதமர் நேரு தொடங்கி நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வரை இந்தியாவின் சிற்பிகள் என்று மாணவர்களைத்தான் அடையாளம் காட்டுகின்றனர். அப்படிப்பட்ட இளம்தூண்கள் உருவாக்கப்படும் பள்ளிக்கூடங்களும், உருவாக்கப்படும் முறையும் இன்றுவரை எவ்வித மாற்றமும் பெறாத நிலையிலும் கூட இந்தியா வல்லரசாகுமா? போன்ற கேள்விகளுடன் வளரும் நாடாக வளர்ந்து கொண்டே இருக்கிறோம்!குழந்தைத் தொழிலாளர் முறைக்கு தடைவிதித்து சட்டமியற்றப்பட்டும் முற்றிலும் அம்முறை ஒழிக்கப்படவில்லை; வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று இலவசக்கல்வி முறையைக் கொண்டு வந்தாலும் கூட கற்பிக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களோ இலவச உணவு, உடை வழங்கும் முகாம்களை போல்தான் செயல்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்!பணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தை நன்கு படிக்க வேண்டுமென்றால் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்தால்தான் உண்டு என்ற நிலையில்தான் நாம் உள்ளோம். இதை தெளிவாக தெரிந்து கொண்டுவிட்ட தனியார் பள்ளிகளோ அவர்கள் விருப்பத்திற்கேற்ப கல்விக் கட்டணத் தொகையை ஏற்றி கல்வியை வியாபாரமாக்கிவிட்டனர். இது பற்றாது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கே லஞ்சம் வாங்கும் அளவுக்கு தனியார் பள்ளிகளை கொழுத்து வளர விட்ட பெருமை அரசுக்கும், சிறிது வசதி படைத்த மக்களுக்குமே சேரும்.இவர்களை விடுங்கள்! கடனை வாங்கியாவது தங்கள் குழந்தையை குறிப்பிட்ட தனியார் பள்ளியில் சேர்த்துவிடத் துடிக்கும் பெற்றோர்களை என்னவென்று கூறுவது?அவர்களையும் குறை கூற முடியாது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுவது தனியார் பள்ளி மாணவர்களே! நுனி நாக்கு ஆங்கிலமும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது. அப்படியே அரசுப்பள்ளிகளில் படித்து தொழில் சார்ந்த படிப்புகளுக்கு சென்றாலும் அங்கும் சமாளிக்க முடியவில்லை.ஆங்கிலத்தில் படித்து எழுதுவதற்கான மொழித்தடங்கல்; மற்ற மாணவர்களின் மொழிப்புலமையை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை.[தாய்மொழிவழிக் கல்வி முக்கியம்தான்,ஆனால் 'ஒரு மொழியை மற்றொரு மொழி ஆதிக்கம் செய்யக்கூடாது' எனும் முதல்வர் கருணாநிதியின் தற்போதைய(?!) ஆலோசனையையும் கருத்திலேற்றினால் இன்னும் நலமே!] இப்படி அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?சிந்தித்துப் பார்த்தால் அரசின் நடவடிக்கையில் சற்று மாற்றம் தேவை என்பது மட்டும் புரிகிறது. இரண்டு தலைமுறைகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்தவர்களே ஆசிரியர்களாய் இருந்திருக்கிறார்கள் ; இளங்கலை பட்டம் முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராய் இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்களுடைய தகுதி வெறும் 'கல்வியின் அடிப்படை ' என்று வேலை வழங்கியிருக்கிறார்களேத் தவிர தரத்தின் அடிப்படையில் அல்ல. மற்ற துறைகளில் வேலை வாய்ப்பை பெற அந்நிறுவனங்கள் மூன்று முதல் ஐந்து சுற்றுகள் வரை நேர்காணல்களை நடத்தி தேர்வு செய்யும் போது,ஒரு சமூகத்தின் அடிப்படை கல்வியையே அளிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு பட்டய படிப்புடன் தகுதி நிறைவடைந்து விடுவது ஆச்சரியமாகவும் சற்று வருத்தமாகவும் உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு புத்தகத்தில் உள்ளவற்றை மனப்பாடம் செய்தோ அல்லது அப்படியே வாசித்தோ காண்பிப்பதுடன் கடமை முடிந்து விடுகிறது. மாணவர்களுக்கும் தேர்வில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதியிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்ற போதனை. புதுப்புது பாடத்திட்டங்கள் மாறும் போது ஆசிரியர், மாணவர் இருவருக்கும் மனப்பாடம் செய்வதில் போட்டி; மாலை நான்கு மணிக்கு பள்ளி மணியடிக்கும் முன்பே பையை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகும் ஆசிரியர்கள். இப்படி மாணவர்களுக்கு நிகராகவே ஆசிரியர்களும்! அதற்காக அனைத்து அரசுபள்ளிகளையுமோ, அனைத்து ஆசிரியர்களையுமோ குறைகூற முடியாது. ஆசிரியப்பயிற்சி படிப்பையே தவம் போல் படிக்கும் மாணாக்கனும் உண்டு; மாதம் தவறாத சம்பாத்தியம், இன்ன பிற சலுகைகளுக்காக படிக்கும் மாணாக்கனும் உண்டு. எங்கள் மாவட்டத்தில்(திருவாரூர்) நான் கண்ட சிறந்த அரசுப்பள்ளிகளும் உண்டு. ஆனாலும் 80% -க்கும் மேலான அரசுப்பள்ளிகள் மழைக்கால ஒதுங்குமிடமாகதான் உள்ளது.இந்நிலை மாறி வசதி படைத்தவர்களும் அரசுப்பள்ளிகளின் தரத்திற்காக தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க வைக்க முன்வர வேண்டுமானால் உயர்ந்த கட்டிடங்கள் மட்டும் போதாது; ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தின் போது ஐந்து சுற்றுகளுக்கும் மேலான நேர்காணலுடன், யார் சிறப்பாக வகுப்பெடுக்கும் திறமையுடையவர்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்து வேலை வாய்ப்பளிக்க வேண்டும்; புதிய பாடத்திட்டங்கள் மாறும் பட்சத்தில் அவர்களுக்கு பாடத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையிலும் விடுமுறைக் காலங்களில் சிறப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும். மேலும் ஆசிரியப் பயிற்சி படிப்பின் போதும் அவர்களை மாணவர்களாகவே பாவிக்கும் படிப்பை விடுத்து அவர்களுக்கு மேலாண்மை தகுதியை வளர்க்கவும், மாணவர்களை கவரும் விதத்தில் பேசவும், மாணவர்களின் மனதைப் புரிந்து கொள்ளும் வகையில் மனோதத்துவப் படிப்பையும் கற்றுத் தர வேண்டும். இன்றைய அரசியல் தலைவர்கள் யார், அவர்களுடைய பணி, கடமைகள், தேர்ந்தெடுக்கும் மக்களின் நலன்களுக்கு அவர் எவ்விதத்தில் பொறுப்பு என்பதையெல்லாம் மாணவர்களுக்கு கற்பிப்பவராக ஆசிரியர் இருக்க வேண்டுமாதலால் பயிற்சி படிப்பில் அரசியல் வேண்டும்.தொழில்துறை படிப்பில் கணினிவியல், மின்னணுவியல், தொழில்நுட்பவியல் போன்ற உட்பிரிவுகளில் பயிற்சி அளிப்பதை போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற முதல்நிலை வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு அவற்றிற்கான சிறப்புப் பயிற்சி அளித்தல் அவசியம். பயிற்சி படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதக்கம் வழங்குவதோடு நிறுத்திவிடாமல், இத்தகுதிகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டால்தான் ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் என்று அறிவிக்க வேண்டும். வெறும் படிப்போடு நின்று விட்டவர்களுக்கு வேலை முதற்கொண்டு எவ்வித சலுகையும் கிடைக்க போவதில்லை என்பதை உணர்த்தினாலே உலகின் மிகச்சிறந்த ஆசிரியர்கள் நம் நாட்டவர்கள் என்ற நிலை தோன்றி விடும்.


தனியார்ப் பள்ளிகளைப் போலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி(மாலை நேர படிப்புத் திட்டம், வகுப்பில் கவனித்தவற்றை விளக்கும் திறன்) அளிக்க வேண்டும். தனியார்ப்பள்ளி மாணவர்களுக்கு நிகரான ஆங்கிலப் புலமையை பெற ஆங்கிலப் புத்தகங்களையோ, நாளிதழ்களையோ வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் கலந்துரையாடல் போன்ற விஷயங்களுக்காக தினமும் 30 நிமிடங்கள் கட்டாயம் ஒதுக்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசின் ஆராய்ச்சிக் கழகங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய செயல்முறை விளக்கத்தை நேரில் சென்று பெரும் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.


இன்றைய சூழலில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியப் பயிற்சி படிப்புகளில் சேருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசும் அதிகமான பள்ளிகளைத் திறக்கிறது. அதிக அளவில் பள்ளிகள் திறக்கப் படுவதால் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளான கட்டிட வசதி, சோதனைச் சாலைக் கூடங்கள், நூலகங்கள் இல்லாமலே போய்விடுகிறது; ஏன் தூய குடிநீர் வசதியும், கழிப்பிட வசதியும் கூட இல்லாமல் பெயருக்குப் பள்ளிக்கூடங்கள் திறக்கப் படுகின்றன. எனவே இப்படி அதிக அளவில் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தாலே அவை தரத்துடன் செயல்பட உதவியாயிருக்கும். சின்ன சின்னதாய் 50 பள்ளிகள் இருக்கும் இடத்தில் 15 பெரிய, தரமான பள்ளிகள் போதுமானது. 50 பள்ளிகளில் 500 ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் 15 பள்ளிகளில் பள்ளிக்கு 30 வீதம் 450 தரமான ஆசிரியர்கள் போதுமானவர்கள். மீதமுள்ளவர்களை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உதவியாளராக, வினாத்தாள் தயாரிப்பவராக, தேர்வு கூட கண்காணிப்பாளராக என்று பணியிலமர்த்த வேண்டும். சிறப்பாக பணி புரியும் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர், உதவிக் கல்வி அலுவலர் என்ற பணி உயர்வுகளை விடுத்து தேசிய அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்த வேண்டும்; அதாவது தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான தர வரிசைப் பட்டியலை தயாரித்து முதல் பத்து இடங்களை பிடிக்கும் ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவரின் கையால் 'நல்லாசிரியர்' விருது அளிக்க வேண்டும்; சிறந்த ஆசிரியர்களின் உதவி கொண்டு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி துறைகளையும் தேசிய அளவில் அமைக்க வேண்டும்; அதேபோல் நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் தர வரிசை நிர்ணயித்து,பின்தங்கியப் பள்ளிகளுக்கு இந்த 'நல்லாசிரியர்களை' பயன்படுத்த வேண்டும்;நாட்டின் சிறந்த பள்ளிகளுக்கு பிரதமர் நேரில் சென்று உரையாற்றி, மாணவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் ஒருமுறை ஆசிரியர் நியமனத் தேர்வுக்கான நேர்முகக்காணலில் தோல்வியடைபவர்க்கு கூடுதலான தகுதிச் சுற்றுகளுடன் கூடிய மறுதேர்வை நடத்த வேண்டும். இதனால் தரமான,திறமையுடைய ஆசிரியர்களை அடையாளம் காண முடியும்.


அரசுப்பள்ளிகளுக்கு சிறந்த கட்டிடங்கள், சோதனைச்சாலைக் கூடங்கள், நூலகங்கள்,குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இவற்றுடன் ஒவ்வொருப் பள்ளிக்கும் பள்ளி வாகனம் என்பதை கட்டாயமாக்க வேண்டும். பள்ளி வாகனங்களின் ஒட்டுனருக்கென்று குறிப்பிட்டத் தகுதிகளையும் விதிமுறையாக்க வேண்டும். நூலகங்களில் பஞ்சதந்திரக் கதைகளை வாங்குவதோடு நிறுத்திவிடாமல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், சுய முன்னேற்ற புத்தகங்களையும் கொண்டுவர வேண்டும். மேலும் எந்த ஒருத் துறையின் (தொழில்நுட்பம், தொழில்துறை, விவசாயம், மண்ணியல், தொல்பொருள் ஆராய்ச்சி, பொருளாதாரம்...)செயல்பாடுகளையும், அதன் முடிவுகளையும் நாளைய இந்தியாவின் சிற்பிகளான இன்றைய இளம் சிறார்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நூலகத்திற்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இரண்டு வருடத்திற்கு முன்னதான தகவல்களை பெற வேண்டுமானால் நூலகங்களை நாடினாலே போதும் என்ற நிலை வந்தாலே எல்லாத்துறைகளையும் பற்றின தெளிவை மாணவர்கள் மட்டுமின்றி இன்றைய தலைமுறையினரும் பெறமுடியும். அரசுப்பள்ளிகளில்தான் இத்தகையத் தகவல்களை பெற முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்தால்தான் அரசுப்பள்ளிகளின் மதிப்பும் உயரும். இதெல்லாம் நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஏன் முடியாது?கணினித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூலகங்களை ஒருங்கிணைக்க முடியுமல்லவா? இந்த ஒரு விஷயம் நடந்தாலே போதும் அடுத்த ஊழலற்ற,நேர்மையான தலைமுறையை உருவாக்க!!


அண்மையில் அரசு 'அனைவருக்கும் கல்வி' என்ற சட்டத்தை செயல்முறைப்படுத்தியது; மேலும் தேசம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் படிக்கலாம் என்றும் 6-முதல் 12-ஆம் வகுப்புகள் வரை ஆங்கில மொழிவழிக்கல்வி என்பதையும் கட்டாயமாக்க வேண்டும்.இது மொழிப்பிரச்சினையை தவிர்க்க உதவுவதோடு அனைவருக்கும் தரமான கல்வி என்ற ஆரோக்கியமான கல்விமுறையையும் உருவாக்கும். இது சாத்தியமா..? மத்திய அரசாங்கம் மாநில அரசுகளின் பையில் பணத்தைப் போடாமல் தனியாக கல்வி ஆணையத்தை நிறுவி அதன் மூலம் 'அனைவருக்கும் கல்வி ','ஒரே பாடத்திட்டம்' போன்ற சட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே இது நூறு சதவிகிதம் வெற்றியடையும்.

புதன், 24 மார்ச், 2010

திருமங்கலம் தொடருமா...?-பகுதி-2

தமிழகத்தில் மற்றுமொரு இடைத்தேர்தல் பென்னாகரம் தொகுதியில் நடைபெறவிருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் 25- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா "அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக்கவர கூடுதலாக பணம் செலவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறியதுடன் "கூடுதலான பணப்புழக்கம் தெரிய வந்தால் வேட்பாளர் தகுதியிழப்பு செய்யப்படுவார்" என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்(எத்தனை முறை எச்சரிப்பீங்க...)தமிழகத்தில் இடைத்தேர்தல்களும் வரிசையாக வந்தபடிதான் உள்ளன;பணப்புழக்கமும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது.திருமங்கலம் தொடங்கி கம்பம்,இளையான்குடி,தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம்,பர்கூர் இன்று பென்னாகரம் என்று தொடர்கிறது.வரும் இடைத்தேர்தல்களிலும் (மயிலாப்பூர் மக்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்)இதையே எதிர்பார்க்கலாம்.எந்தக் கட்சி பணவிநியோகத்தில் முந்தியதோ அந்தக் கட்சியே அத்தொகுதிகளில் வெற்றியும் பெற்றது.பென்னாகரத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளதாம்.ஆம்!இம்முறை பா.ம.க அதிகளவில் பணம் கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளதாம்(உண்மையா!).இந்த தேர்தலிலும் வெற்றியடைய வேண்டுமென தி.மு.க துடிப்பது ஒருபுறமிருக்க,இந்தத் தொகுதியிலாவது வென்று "இறுதியில் ஜனநாயகமே வென்றது" என்று கொக்கரிக்க முடியாதா என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க ,தங்கள் சமூகத்தினரின் தொகுதியில் தோற்றுவிடக் கூடாது என்ற படபடப்பில் பா.ம.க ,இருக்கும் இந்தத் தொகுதி கிடைத்தாலாவது கூட்டணி பேரம் படியுமே என்ற ஏக்கத்தில் தி.மு.தி.க !



ஆனால் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றால் என்ன இம்முறை நம் தொகுதி திருமங்கலமகிவிட்டது எனும் விட்டேற்றியான மகிழ்வுடன் மக்கள்!ஆனால் இந்த பாணியை தொடங்கி வைத்த கட்சி மீது இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை!குப்தாவும் என்னதான் செய்வார்?தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்ட பாதுகாப்பு வேண்டுமென்றால் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மனம் வைத்தால் தானே நடக்கும்;எனவே ப.சி .அஞ்சாநெஞ்சர் போன்றோரின் வெற்றியையும் கண்டும் கானாமல்தனே இருக்க வேண்டும்!







எது எப்படியோ இந்த முறையும் தி.மு.க-தான் வெற்றி பெறும்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வியாழன், 18 மார்ச், 2010

33%

கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாகவே இருந்து வந்த 33% மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மார்ச் 9,2010 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.மேலும் இச்சட்ட மசோதா லோக்சபாவிலும்,மாநில சட்டசபைகளிலும் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக்கப்படும்.
இச்சட்ட மசோதாவிற்கு பா.ஜ.க,இடதுசாரி கட்சிகள்,தி.மு.க, அ.தி.மு.க என பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும்,ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இன்னும் எதிர்த்த வண்ணம்தான் உள்ளனர்.எதிர்ப்பதற்கான வர்ண சாயங்களோ 'சிறுபான்மையினருக்கும்,பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு' என்பதே! இவர்கள் உண்மையிலேயே உள்ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்காக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அல்ல...எங்கே ஆண்களுக்கான அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தால்தான்!

பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று ஒருபுறம் வேஷமிட்டுக்கொண்டும், 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்று வசனங்களை உதிர்த்துக்கொண்டும் வாக்குகளை வாங்கிக் கொள்ளும் சில அரசியல் கட்சிகளே பெண்களுக்கு எத்தனை தொகுதியில் சீட்டுக் கொடுத்துள்ளன என்று பார்த்தால் உண்மை புரிந்துவிடும். ஏன் இவர் இல்லையா?இந்த கட்சி இல்லையா?என்று சுட்டிக் காட்டுபவர்கள் முதலில் அரசியல் குடும்ப பின்னணியை சாராத பெண்கள் குறிப்பிட்ட காட்சிகளில் எத்தனை பேர் உள்ளனர் என்று சிந்தித்து பாருங்கள்!இந்த நிலையை மாற்றுவதற்காகதான் அரசு குறிப்பிட்ட சதவிகிதத்திலாவது(33% சதவிகிதம் என்றிருக்க அவசியமில்லை)பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறது.இட ஒதுக்கீட்டிலேயே சீட்டு வாங்கிவிட்டால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமே என்று ஆதங்கப்படுபவர்கள் பெண்களுக்கு அரசியல் திறமை இருக்காது என்று முடிவுக்கு வந்தவர்களே!நாம் சற்று சிந்தித்தோமானால் பிரதமராயிருந்த இந்திராகாந்தி,தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதா,நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் என்று அரசியலில் முன்னனி இடங்களை பிடித்த பெண்களும் நம் நாட்டில் உள்ளனர்.

பெண்களுக்கான வாக்குரிமை,தனி காவல் நிலையம்,பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்பு சட்டங்கள் என்று பெண்ணியம் பேசும் நம் நாட்டில் பெண்ணுரிமை இன்னும் கிடைக்கவில்லை என்பதையே இதுக் காட்டுகிறது!ஒருகாலத்தில் ஹரிஜன மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றனர் ஒரு பிரிவினர்.பின் அரசு அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று வரலாம் என்று சட்டமே இயற்றியது.காலப் போக்கில் அயல்நாட்டவரும் எந்தவித நிபந்தனையுமின்றி கோயிலுக்குள் சென்று வரும் நிலை உருவாகிவிட்டது.இதற்கெல்லாமா சட்டம் இயற்றப்பட்டது என்று எண்ணும் அளவுக்கு நம் மனநிலையும் மாற்றம் பெற்று விட்டது.அதேபோல்தான் இன்று இயற்றப்படும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமும் நாளை 50% பெண்கள் நாடாளுமன்றத்தில் பங்கேற்கும்போது 33% பெண்கள் கூடவா அரசியலில் இல்லாமலிருந்தார்கள் என்று வியக்கும் அளவுக்கு மாறப்போகிறது!எனவே எதிர்ப்புகளில்லாமல் எந்த ஒரு காரியமும் வெற்றியடையபோவதில்லை.இவர்கள் எதிர்ப்பது ஒருபுறமிருக்கட்டும்.கல்வி,மருத்துவம்,பொறியியல்,வானியல் ஆராய்ச்சி ஏன் இராணுவம் என்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் நம் பெண்கள் அரசியலுக்கு மட்டும் வரத் தயங்குவது ஏன்?இன்றைய வன்முறை அரசியல் கலாச்சாரத்தாலா...?அல்லது ஊழல்,மோசடி போன்ற சமூகக் குற்றங்களுக்கு அஞ்சுவதனாலா...? "அரசியல் குடும்பப் பெண்ணுக்கு ஒத்து வராது" என்று ஒதுங்கும் பெண்களே,நீங்கள் அரசியலில் கால் பதித்தால் ஒருவேளை இவை அனைத்தும் மாற்றம் பெற்று புதுப்பொலிவுடன் இந்தியா திகழும் அல்லவா?எனவே அரசியலை ஒதுக்காதீர்கள்!அரசியலை வெறுக்காதீர்கள்!எதிர்வரும் தேர்தல்களில் துணிந்து வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யுங்கள்!அதுவே அரசின் கனவும்!

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கண்ணோட்டம்

"தனிமனிதனுக்கு உணவில்லையெனில்..."
பாரதியின் கருணைக் கவிதையை
கொலைவெறியில் பேசும்
கறை வேட்டிக்காரர்களே!

வீதியில் அரங்கேறும்
பிறிதொரு உயிர்படும்
வேதனையைக் கண்டும்
காணாமல் போகும் குருடர்களே!

நான் அஹிம்சாவாதி
எனக்கூறிக் கொண்டு பிறர்
மனத்தைக் கொத்திக் காயப்படுத்தும் பருந்துகளே!

வஞ்சத்தைத் தீர்க்கவோ
தன்வயிறு நிறைக்கவோ
பிறர் உயிர் தின்னும் மாமிசப் பட்சிகளே!

என்றேனும் கருணையுடன் நினைத்திருப்பீரா...?

உயிர்ப்பிச்சைக் கேட்டும்
கிடைக்காது போன வெற்றிவேலனை...
மதத்தீயில் கருகிய உயிர்களை...
அநாதையாக்கப்பட்ட பிஞ்சுகளை...
சமாதியாய், அகதியாய் மாறிப்போன உறவுகளை...
சுனாமி சுருட்டிய சொந்தங்களை...
தீவிரவாதத்தில் செத்து மடியும் பந்துக்களை...
நிலநடுக்கத்தால் சுயநினைவற்ற பிறந்த குழந்தையை...

இல்லையெனில்...

வீதியில் உறங்கும் குளிரில் விறைத்த
உடலுக்கு- ஒரு போர்வையாவது
அளித்துப் பார்!
உன் கண்ணோட்டம் மாறும்.
வள்ளுவனின் 'கண்ணோட்டமும்' சிறக்கும்!!

திங்கள், 15 பிப்ரவரி, 2010

காதலில் முழுமை...

அன்பு மனைவிக்கு,

உணர்வுப் பகிர்தலுக்காக ஏங்கும்
உன்னவன் எழுதுவது.

மறக்க முடியாத சில தருணங்கள்
மனதில் நிழலாடுகிறது...
பகிர்ந்து கொள்ள வேண்டும்
போல் இருக்கிறது
பாசிபடிந்த பழையவைகளை...

உன் இயல்புகளைப் பற்றி
இம்மியளவும் அறிந்திருக்கவில்லை...
அறிய முற்படவும் இல்லை...
ஒன்று மட்டும் அறிந்திருந்தேன்
உன் விருப்பங்களை கருக்கி,
என் விருப்பங்களை
குளிர்காயச் செய்தாய்...

என் மீதான உன் புரிதல்
எந்த நிலையிலும் தோற்றதில்லை.
நான் அடிக்கடி தோற்றேன்
என் மீது நீகொண்ட
அன்பின் வெற்றியால்...

நம் மகளின்
முதல் அழுகுரலை விட
அதற்கான உன் அழுகை நீரை
நேசித்தேன்...

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல...
மன்னித்தருளினாய்
புள்ளிகளை பூகம்பங்கள் ஆக்காது!
வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய்...

இயன்றவரை உன்னை விரும்பினேன்
இன்றுவரை இயலவில்லை
அதனை வெளிப்படுத்த...

மாறாதக் காதல் தேவதையே...
உன்னிடம் நிறைய பேசவேண்டும்,
நிகழ்ந்தவைகளைப் பற்றி,
நிகழாதவைகளைப் பற்றி,
நிஜங்களைப் பற்றி,
நம் நேசத்தைப் பற்றியும்!

பகிர்ந்து கொள்ளத் தவறிய
பழைய நினைவலைகளில்
நாம் கால் நனைக்க வேண்டும்...

குழந்தை எனக் கைப்பற்றிக் கொள்கிறேன்
கூட்டிச் செல் எங்கேயாவது...