திங்கள், 24 ஜூன், 2013

கருமமே கண்ணாகக் கொண்ட வீரன்!

இன்று எதேச்சையாக காமராஜரைப் பற்றிய வலைத்தளத்திற்குள் செல்ல நேரிட்டது.பின் அவரைப் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தேன்.படித்ததும் உண்டான உணர்வுக் குவியலை  பகிர்ந்து கொள்ள விரும்பியே இப்பதிப்பு!

எங்கள் வீட்டில் இரு தலைவர்களின் படம் உள்ளது என்றால் அது எம்.ஜி.ஆர் மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோருடையதுதான்!ஒருமுறை எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் குடிபெயர்ந்ததால் வீட்டிலிருந்த வேண்டாதப் பொருட்களை அப்புறப்படுத்தினர்;அதில் காமராஜருடைய படமும் இருந்தது;என் அப்பாவோ அந்தப் படத்தை கேட்டு வாங்கி வந்தார்,எங்களுக்கு எதற்கு இத்தனைப் படம் என்று கோபம்தான் வந்தது.எதற்கு இந்த அப்பா இப்படி காமராஜர் என்றால் உருகுகிறார் என்று சிறு எரிச்சலும் உண்டு;அப்பாவும் காமராஜரின் சத்துணவுத் திட்டம்,பாலம் கட்டியது,தொழிற்சாலைகள் அமைத்தது என்று காமராஜரின் பெருமைகளைக் கூறுவார்.கேட்பதோடு சரி!பள்ளியிலும் தமிழ் பாடத்தில் அவரைப் பற்றி வெறும் கடமையாகவே படித்ததால் அவரைப் பற்றி ஒருபோதும் உயர்வாக எண்ணியதில்லை!
இன்று திரும்பவும் அவரைப் பற்றி படிக்க நேர்ந்ததில் ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.வெறும் பத்து ஆண்டு ஆட்சி காலத்திலேயே இவ்வளவு செய்ய முடியுமென்றால் ஐந்து முறை முதலமைச்சர் என்று பெருமை கூறி சுரண்டியவர்களையும்  சற்று நினைத்துப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.அவர் இறந்தபோது அவருடைய சட்டை பையில் வெறும் அறுபத்தி ஆறு ரூபாய்தான் இருந்தது என்று படிக்கையில் இப்படி ஒரு மனிதர் ஊனோடும் உயிரோடும் இந்த பூமியில்தான் உலவினார் என்று பெருமிதத்தில் கண்ணீர் முட்டியது.என் அப்பாவின் உணர்வை இன்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த மாபெரும் மனிதரின் சில சாதனைகளென்று நான் படித்ததில் பட்டியலிட்டவை...இதோ!


தொழில் துறைகளை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்த தொடங்கியது காமராஜர் அரசு. காமராஜர் ஆட்சியின் இறுதியில் தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. அவரின் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சியின் பகுதி...

பெரும் தொழில்கள்:
1. நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (I.C.F)
3. திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL)
4. ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை (HPL)
5. ஆவடி கனரக (டாங்க்)  தொழிற்சாலை
6. கல்பாக்கம் அணுமின் நிலையம்
7. கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
8. சங்ககிரி துர்கம் இந்தியா சிமெண்ட்ஸ்
9. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10. கிண்டி அறுவை சிகிச்சை கருவித் தொழிற்சாலை
11. துப்பாக்கி தொழிற்சாலை
12. நெய்வேலி  நிலக்கரி சுரங்கம்
13. சேலம் இருப்பு உருக்காலை
14. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளாண்ட் தொழிற்சாலை

விவசாயம் சார்ந்த தொழில்கள்:
1. காமராஜர் பொறுப்பேற்றபோது (1953) தமிழகத்தில் புகலூர், நெல்லிக்குப்பம், பாண்டியராஜபுரம் ஆகிய 3 சர்கரை ஆலைகள் இயங்கி வந்தது. 1963-ல் மொத்தம் 14 சர்கரை ஆலைகளாக உயர்ந்தது.
2. திருச்சியில் 20 லட்சம் சக்தி கொண்ட எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

பிற தொழில்கள்:
நூல் நூற்பு ஆலைகள் (159)
துணிநூற்பு பாவுகள் (Looms) (8000)
4 மிதிவண்டி தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலை
2 சோடா உற்பத்தி தொழிற்சாலை
21 தோல் பதனிடும் தொழிற்சாலை
ரப்பர் தொழிற்சாலை
காகித உற்பத்தி ஆலை
அலுமினிய உற்பத்தி ஆலை

தொழிற் பேட்டைகள்:
1. கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.
2. இது தவிர திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், தேனி, நாகர் கோயில், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் துவங்க காமராஜர் அரசு முயற்சி மேற்கொண்டது.
3. மேலும் சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோவை, பொள்ளாச்சி, திருச்சி ஆகிய இடங்களில் தொழிற் குழுமங்கள் அமைக்கப்பட்டன.


இன்னும் சில விசயங்கள் அடுத்த பதிப்பில்....!



புதன், 12 ஜூன், 2013

குடியாண்மை

இந்தியாவின் ஒட்டுமொத்த குடிமக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விசயம் -2014 நாடாளுமன்றத்தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆட்சி மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.எனவே ஆட்சி மாற்றத்திற்கு பா.ஜ.க வை விட்டால் வேறு கதி ஏது  என்ற நிலைப்பாடு ஏற்பட்டபோதும் இந்து சமய கட்சியாகவே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் பா.ஜ.க வும் அதன் தலைவர் அத்வானியும் மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போனது வேதனையான விசயம்தான்!இருப்பினும் பா.ஜ.க வின் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் மனதில் விழுந்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!இவர் போல் நம் மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் வேண்டும் என்று ஆரம்பித்து மோடியே நம் பிரதமர் ஆனால் எப்படி இருக்கும் என்று அனைவரையும் கனவில் மிதக்க வைத்தவர் மோடி!தொடர்ந்து 4 முறை முதலமைச்சர் என்ற ஒன்றே போதும் இவர் ஆட்சியை பறைசாற்ற!ஆனால் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க மோடி பிரதமராவது சாத்தியமா என்ன?அதிலும் 85 வயதிலும் போட்டியில் முன்னிலை வகிக்கும் அத்வானிதான் விட்டுத் தருவாரா?தன் கருத்தை மீறி மோடிக்கு 'தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர்' பதவியை அளித்து விட்டார்கள் என்று தன்னுடைய பதவிகளை துறந்து கட்சியை விட்டு வெளியேறும் அத்வானியை என்னவென்று நினைப்பது?அத்வானியின் ராஜினாமா கடிதம் முதல் முறை நிகழ்வது அல்ல-"நான் சொல்வதை கேட்காவிட்டால் சாப்பிடமாட்டேன்" என்று அடம்பிடிக்கும் குழந்தையின் மிரட்டல்.தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் "நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவதற்கு பதில் சிலர் தன சுய விருப்பங்களுக்காக கட்சியை பயன்படுத்துகின்றனர்" என்று கூறியிருப்பதை அவரும் படித்துவிட்டுதானே  அனுப்பியிருப்பார்?மேலும் தன்னுடைய வலைதளத்தில் 'அம்பு படுக்கையில் தன மரணத்திற்கு காத்திருக்கும் பிதாமகரின் நிலை'யை தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் திரு.அத்வானி அவர்கள் அதே பீஷ்மர் தந்தையின் மகிழ்ச்சிக்காய் தன் அரசுரிமையை விட்டுத்தந்து சிற்றன்னையின் புதல்வரை அரியனையிலமர்த்தி வழி நடத்திய விதத்தையும் படித்திருப்பார்தானே?!