பணம்!
இது இந்த உலகில் வாழத் தேவையான ஒன்று.
அது இல்லாதவன் பிணம்!
'கல்லறைக்கு போகும் வரை சில்லறை தேவை' என்று வேடிக்கையாய் கூறுவதும் உண்டு.உலகில் மிகக் கொடியது வறுமை.
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் மகாகவி.
"இடும்பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது" என்ற ஔவையின் வறுமை புலம்பலோ நம் உள்ளத்தையே உலுக்கும்.
சிறிது பணம் இல்லாது போயின், அந்த கொடுமையில் உயிர் கூட பிரியலாம்.ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பர்.ஆம்!ஏழைக்கு இவ்வுலகில் எதுவுமே இல்லை.
அருள் பற்றிப் பேசிட வந்த வள்ளுவர் பொருள் பற்றிப் பேசியதையும் பாருங்கள்....
"அருள்இல்லார்க்(கு) அவ்வுலகம் இல்லை;பொருள்இல்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு ".
ஆம்!பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகமே இல்லை.
அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆனதும் மனிதனுக்கு மனத்தேவைகள் ஆரம்பமாகின்றன.தன்னை உலகம் கண்டுகொள்ள வேண்டும்;பாராட்ட வேண்டும் என நினைக்கிறான்.
ஒரு சமயம் முல்லா நசுருதீன், 'அடுத்த தெருவில் விருந்து நடக்கிறது' என்ற வதந்தியை . கேட்டவர்களெல்லாம் அங்கே ஒடத்துவங்கினார்கள்.சிறிது நேரம் கழித்து எல்லோரும் ஓடுவதைப் பார்த்த முல்லா,'ஏதோ விஷயமிருக்கிறது' என்று தானும் ஓட ஆரம்பித்தார்.
கதை இதுதான்!
எங்கே ஓடுகிறோம்,ஏன் ஓடுகிறோம் என்பதைப் பற்றி நினைத்து பார்க்காமலே மனிதன் ஓடுகிறான்;வாழ்நாள் முழுதும் ஓடிக்கொண்டிருக்கிறான்.பெயருக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு ஓடுகிறான்;பணத்துக்கும்,பதவிக்கும் ஆசைப்பட்டு எதையும் செய்யத் தயாராகிறான்.
மனித வாழ்வில் தேவை என்ற அடிப்படையையும் , ஆசையையும் இணைத்து ஒரு கொடு வரைந்து,அதில் தேவைக்கு அருகிலோ அல்லது ஆசைக்கு அருகிலோ ஒரு குறுக்குக்கோடு போட்டு நம் ஆசைக்கு ஓர் எல்லை கட்ட வேண்டும்.இல்லையென்றால் நாம் ஆசையின் பின்னால் ஆயுள்பூராவும் ஓடிக்கொண்டிருப்போம்.சுவையாக இருக்கிறது என்பதற்காக தேவைக்கு மேல் சாப்பிட்டால் என்ன ஆகும்?அஜீரணம்,வயிற்று வலி!அதுபோலதான் பேராசை அநாவசிய செலவுகளில் முடிகிறது.
அதற்காக ஆசையில்லா மனிதன் என்று இவ்வுலகில் எவரும் இல்லை.ஆசை பிறக்கும்போது அங்கு தேவையும்,தேடலும் பிறக்கிறது.எந்த குறிக்கோளும் இல்லாது அடுத்தவரிடம் கையேந்தி பிழைப்பவரிடம் சில்லறைக் காசு அளவிலான செல்வத்தேடல்;அன்றாட உணவுத் தேவையை மட்டும் பூர்த்தி செய்து வாழும் மனிதரிடம்,உறங்குவதற்கு ஓர் இடம் என்ற அளவில் செல்வத்தேடல்;உணவு ,உறைவிடம் கிடைத்தபின் உடுத்திக்கொள்ள இரு நல்ல ஆடைகளுக்கான தேடல்;அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியுள்ள மனிதனுக்கு குழந்தைகளின் கல்வி,எதிர்காலத்திற்கான செல்வத்தேடல்;இவை எல்லாவற்றிற்கும் வசதி உள்ள மனிதனுக்கு செல்வத்தின் மீதான செல்வத்தேடல்;அடுத்தவர்கள் இப்படி இருக்கிறார்கள் நாமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகத்திற்காக தங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் மனிதர்களின் செல்வத்தேடல்.
பொருளாதாரத்தில் கடைநிலையிலிருக்கும் மனிதனுக்கு உயர்நிலை போகும்வரை தேடலுக்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.ஆனால் உயர்நிலை அடைந்த பிறகோ நாட்டின் அல்லது உலக பணக்கார வரிசையில் இடம்பிடிக்கும் பொருட்டு தேடல் தொடர்கிறது.இப்படி பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருந்தாலும், உயர்நிலையிலிருந்தாலும் இந்த செல்வத்தை தேடும் மனிதர்களின் மனோபாவம் மேலும் தேடல் மட்டுமே.
அப்படி நாட்டின் அல்லது உலகப் பணக்காரர்கள் வரிசையிலிருக்கும் மனிதர்களோ சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பவசம் போன்ற கூறுகளால் மேலும் செல்வம் தேட வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றனர்.உதாரணத்திற்கு பங்குவர்த்தகத்தில் கைதேர்ந்த வல்லுநரான வாரன் பபெட்டை (warren buffett)
எடுத்துக் கொள்வோம். வயதான அவரால் 'இருக்கும் சம்பாத்தியம்' போதும் என்று தன்னுடைய வர்த்தகத்தை கைவிட முடியாது:காரணம்,அவர் தன்னிடம் முதலீடு செய்துள்ள பங்குதாரர்களுக்கு லாபம் சம்பாதித்து தர வேண்டிய கட்டாயம்;தன்னால் வேலை வாய்ப்பளிக்கப்பட்டவர்களை கைவிட முடியாத சூழ்நிலை!இப்படி பிறர்க்கான வாழ்க்கையும் கூட தேடலுக்கு முக்கியமான காரணகர்த்தாவோ?!
பழங்காலத்தில் இந்த செல்வத்தேடல்களே கிடையாது;இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்ந்தனர் என்று கூறிவிட முடியாது!
மதத்தின் பெயரால் வழிபாட்டு முறைகளை உருவாக்கி,கடவுள் சிலைகளை தங்கள் விருப்பத்தின்படி வடிவமைத்த நம் முன்னோர்கள் செல்வம் சேர,கடன்சுமை குறைய என்று செல்வத்தேடலை கடவுளிடமிருந்தே ஆரம்பித்து வைத்தனர்.
ஒழுக்கத்தை உபதேசிக்க வந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் காப்பியத்தலைவன் கோவலன் தன மனையாள் கண்ணகியுடன் பொருள் தேடி மதுரை சென்றதும் ; இதிகாசமான ராமாயணத்தில் குபேரனின் செல்வங்களை ராவணன் அபகரித்ததும்,பின் அதனை மீட்க குபேரன் போராடியதும் ;மற்றும் மகாபாரதத்தில் துரியன் பாண்டவர்களின் நாட்டை தன வசப்படுத்திக் கொண்டதும் என்று செல்வத்தேடல்கள் ஒவ்வொரு நூல்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதிலிருந்தே ஆதியிலிருந்து மனிதனின் ஆசைகள் அதிகமாகிக் கொண்டே வருவதைப் புரிந்து கொள்ளலாம்.
மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் சந்தோசம் , நிம்மதி , மனநிறைவு இவைதான் தேவை.ஆனால் இவற்றை பணயம் வைத்து பணம்,பதவியை தேடி ஓடுகிறான்;புகழை நாடி பணம் தேடுகிறான்.
நாம் என்னதான் அதிக பணம் தேடுவது நிம்மதியை குலைக்கும் என்று கூறிக்கொண்டாலும்,உடலும் மனமும் சோர்வடையும்போது மட்டுமே மனிதன் செல்வம் தேடுதலை குறைக்கிறான் அல்லது விடுகிறான்.
ஒருவேளை மனிதன் போதுமான அளவுக்கு செல்வம் சேர்த்தப் பிறகு சோம்பேறியாகிவிடக் கூடாது என இந்தத் தேடலைத் தொடர்கிறானோ?அல்லது தேவையான செல்வத்தை சேர்த்தப் பிறகு ஒன்றும் செய்யாமலிருப்பதால் வாழ்க்கையின் சுவாரசியம் குன்றிவிடுமோ?உண்மைதான்!
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
செல்வத்தின் தேடல் அளவுகோல் 'ஆசை'!அந்த அளவுகோல் ஒவ்வொரு மனிதனின் கையிலும் வெவ்வேறு அளவுகளுடன் உள்ளது.இந்த அளவுகோல் மாறும் விதத்தால் ஒருவருடைய ஆசை மற்றவர்க்கு பேராசையாகவோ அல்லது அற்ப ஆசையாகவோ தோன்றுகிறது.உண்மையில் அவசியமான தேவைகளுக்கான செல்வம் தேடல்தான் நிம்மதி மற்றும் சந்தோசம் தரும்.அதை விடுத்து தேவைக்கதிகமான சொத்துக்களை சேர்ப்பதால் தன்னிடம் இருக்கும் எதோ ஒன்றை இழக்க நேரிடுகிறது;பின் அது நிம்மதியை நாடிச் செல்ல வைக்கிறது!
இப்படி செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போதே மனிதனுக்கு மற்றொரு தேடலும் தொடங்கி விடுகிறது!அது என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்?அதிகமான பணம் கைக்கு வந்துவிட்டால் வேறு என்ன செய்யத் தூண்டும்?
பதவியில் அமர மனமானது ஆசை கொள்ளும்!அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதற்காய் அல்ல; அடிமைப் படுத்துவதற்காக! தன் குலம் தழைக்க,அடுத்தவன் முதுகில் ஏறி பயணம் செய்யத் தூண்டும் அதிகாரத்தைத் தேடி மனமானது அலைபாயத் தொடங்கும்!
ஆம்!அடுத்தக் கட்டுரையில் அதிகாரத்தைத் தேடுதலைப் பற்றி!