செவ்வாய், 21 ஜூலை, 2009

திருமங்கலம்...தொடருமா?

லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழகத்தில் தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகியத் தொகுதிகளில் இடைத்தேர்தல் கலை கட்டியிருக்கும் இச்சமயத்தில்,திடீரென்று அ.தி.மு.க தேர்தல் புறக்கணிப்பு அறிவித்திருப்பது மக்களுக்கு சிறு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.காரணம்

1.எதற்கும் கலங்காத அ.தி.மு.க தலைவியா தோல்வி பயம் கொண்டிருப்பது என்பதும்,அடுத்து
2.தங்கள் வாக்குகளின் பண மதிப்பு குறைந்துவிடுமோ என்ற கவலையும்தான்.

உண்மைதான் !எதற்கும் கலங்காத ஜெயலலிதா ஏன் தேர்தலை புறக்கணித்தார்?

கடந்த 2008 டிசம்பர் மாதம் திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே! 'அதே வழியைத்தான் தி.மு.க லோக்சபா தேர்தலிலும் பின்பற்றியது;நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவும் அப்படியே இருக்கும்' என நினைத்து ஒதுங்க முடிவெடுத்தாரா?அல்லது தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்தால் தி.மு.கவின் ஏளனம் அதிகமாகும் என்று பின்வாங்கிவிட்டாரா?

எது எப்படி இருந்தாலும்,தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஜனநாயக முறையை அவமதிப்பது அல்லது அதற்கு மாறாக செல்வதையேக் காட்டுகிறது.அதெல்லாம் சரி...தேர்தல் ஜனநாயக முறைப்படியா தேர்தல் நடக்கிறது என்று கேட்கலாம்? 'ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது' என்று அறிக்கையும் விடலாம்.'தேர்தல் ஆணையமே பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறது' என்றும் கூறிக்கொள்ளலாம்.ஆனால் இதற்கு முன் பலமுறை மாநிலத்தை ஆட்சி செய்த ஒரு கட்சி எதிர்த்து நின்று போராடாமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் போது,"ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெற்றாலும் கூட மக்களுக்காக போராடப் போவதில்லை"என்பது தெள்ளத்தெளிவாகிறது.தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது, போரில் புறமுதுகிட்டு ஓடும் வீரனை விட கோழைத்தனமாகத் தெரிகிறது.அதற்கு பதிலாக உச்ச,உயர் நீதிமன்றங்களை நாடியிருக்கலாம்.அங்கு போனாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவான பதில்தான் வருமென்றாலும்,எறும்பு ஊரக் கல்லும் தேயுமல்லவா?நீதிமன்றங்களும் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல்,உண்மைக்குக் கட்டுப்பட்டு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை பாராட்டியே தீர வேண்டும்.காரணம் எம்.ஜி.ஆர் காலத்தில் பலமுறை தோல்வியைத் தழுவியவர்;ஐந்து முறை ஆட்சி அமைத்த பெருமைப் பெற்றும் ஒரு முறை மட்டுமே ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார் .இப்படி குறைகள் இருப்பினும் தேர்தலைப் புறக்கணிக்காமல் களம் கண்டவர்.மேலும் அவரைப் பற்றிக் கூற வேண்டிய இன்னொரு விஷயம் வெறும் இலவச அறிவிப்புகள் மூலமே வெற்றியடைய முடியும் என நிரூபித்தவர்.

மக்களிடமோ தேர்தல் என்றாலே தலைமை மாற்றம் குறித்து யோசிக்கும் மனநிலை மாறி,இந்தமுறை தங்கள் வாக்குகளுக்கு என்ன விலை தருவார்கள் என்ற யோசனைதான் அதிகமாகிவிட்டது.

அரசியல்வாதிகளும் "இந்த தொகுதி இந்த கட்சிக்குத்தான்!" என்ற நிலைப்பாடை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குகளுக்கு விலை கொடுக்கின்றனர்.எதிர்க்கட்சிகளோ அதே சூத்திரத்தை உடைத்தெறிய விலை கொடுக்கின்றன.இப்படி இருகட்சிகளும் கொடுக்கும் பணத்தை மக்கள் தராசில் வைத்து,அது எந்த பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கமே நியாயவாதியாகின்றனர்.

ஆனால் வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் புறக்கணிப்பால் அந்த தொகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வருவாயில் ஜெயலலிதா மண்ணை அள்ளி போட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.தி.மு.கவினருக்கோ அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.தேர்தல் ஆணையத்திற்கோ சிறிது தலைவலி குறைந்தது.இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அ.தி.மு.கவின் புறக்கணிப்பு தெரிந்தோ தெரியாமலோ விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உரமிடுவதாக அமைந்துவிட்டது.'2011- சட்டசபைத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமையும்' என கேப்டன் நம்ப ஆரம்பித்துவிட்டார்.அதுவும் சரிதான்....!எத்தனை நாளைக்குத்தான் இருகட்சி ஆட்சி முறையையே பார்ப்பது?அடுத்தவனுக்கும் வழிவிடுங்கய்யா...!

செவ்வாய், 7 ஜூலை, 2009

அரசியலில் இளைஞர்கள்....?

அரசியலில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்.இதுதான் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம்.அதெல்லாம் சரி... எத்தனை இளைஞர்கள் இன்று அரசியலில் ஈடுபட தயாராக இருக்கின்றனர்?அல்லது அப்படி ஈடுபட்ட இளைஞர்களில் எத்தனை பேர் ஆட்சியில் உள்ளனர்?சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மகாகவி பாரதியார்,


        ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா
உறுதிக்கொண்ட நெஞ்சினாய் வா வா

என்று அறைகூவல் விடுத்தும் ஒரு இளைஞனும் செவிசாய்த்தானில்லை.தமிழ்நாட்டை 85 வயது இளைஞர் ஆண்டு கொண்டிருக்கிறார்;அவரது ஆட்சியிலும் அவர் வயதொத்த இளைஞர்களே இடம்பிடித்த்ள்ளனர்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை ஆட்சி செய்த தி.மு.க.,அ.தி.மு.க இவ்விருக் கட்சிகளுமே ஒரு இளைஞனை அமைச்சராக்கிப் பார்த்ததில்லை.வழிவழியாக அரசியல் செய்யும் குடும்பத்திலிருக்கும் மூத்தவர்களுக்கே வாய்ப்புத் தரப்படுகிறது.வயதானவர்களுக்குதான் அனுபவ அறிவு இருக்கும் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்;இளைஞர்களுக்கோ சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமிருப்பதால் புதியத் திட்டங்களின் ஊற்றுக்கண்களாக திகழ்கிறார்கள்.1950- களிலேயே பண்டித ஜவர்ஹலால் நேரு அவர்கள், "The destiny of india will be shaped by the classroom" என்று வருங்கால பாரதத்தின் சிற்பிகளாக இளைய சமுதாயத்தினரைக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இன்றுவரை இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

தமிழ்நாட்டில்தான் இப்படி என்றால் நாடாளுமன்ற ஆட்சியில் இப்போதுதான் இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஒருவழியாக 39 இளைஞர்கள் பதவி ஏற்பு என்று சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால், முன்னாள் சபாநாயகர் பி.எ.சங்மாவின் மகள்,பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவின் மகன்,மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகன்,முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லாவின் மகன்,விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் மகள்,தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மற்றும் பேரன்,காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தின் மகன்....


இப்படி அங்கும் அரசியல் வாரிசுகளுக்கே இடமளிக்கப்பட்டுள்ளதேத் தவிர,உண்மையாக திறமையான,சமூக அக்கறை உள்ள மனிதர்களைத் தேடித் பிடித்து பதவித் தரப்படவில்லை.


இளைஞர்கள் வந்தால் ஓட்டுப்போடுவோம்;யாரும் வரத்தயங்குகிறார்களே என்று கூறும் மக்களுக்கு என் கேள்வி இதோ-

தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு ஏன் வெற்றியடையவில்லை?

காரணம் இந்த தொகுதி இவருக்குத்தான் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. 'அரசியல்வாதிகளே மோசம்' என்று வேதாந்தம் பேசுபவர்களுக்கு ஏனோ புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மனம் வருவதில்லை.தனக்கு எந்த கட்சியால் லாபம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர். பொதுப்பிரச்சனைகளைக் குறித்த ஆர்வம் மக்களிடையே குறையத் துவங்கிவிட்டது.தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஒரு படிப்புப் படித்து, வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் அல்லது தங்கள் தொழிலைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர்; இதையேதான் அரசியல்வாதிகளும் நினைக்கின்றனர்,தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய குலத்தொழிலான அரசியலுக்கு வரவேண்டும் என்று.அப்படி வரும் இளைஞர்களாவது மாற்றுக்கருத்துடன் செயல்பட்டு,லஞ்சம் ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தி,அடிமட்ட மக்களுக்கு இலவசமல்லாத நிரந்தர நலப்பணிகளை செய்வார்களேயானால் 2020-ல் இந்தியாவைப் பற்றின டாக்டர்.அப்துல் கலாமின் கனவுகள் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேறிவிடும்.அதற்கு 'முதலில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு;பொய்,புறங்கூறாமை வேண்டும்.'என்ற கலாம் அவர்களின் அறிவுரையை ஆசிரியர்கள் ஏற்று மாணவர்களின் மனதில் சமூகம் குறித்த நல்லப் பதிவை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் மனப்போக்கையும்,நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதையும் விடுத்து,தங்கள் பிள்ளைகளை சமூக அக்கறை உள்ள மனிதனாக வளர்க்க வேண்டும்.தேசப்பற்று என்பது காஷ்மீர் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக வருத்தப்படுவதும்,நிதித் திரட்டித் தருவதும் மட்டுமல்ல;வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களைப் பார்த்து அவர்களின் பசியையும்,தேவைகளையும் போக்க என்ன வழி என்று யோசிப்பதும்தான்.எந்த மனிதனிடத்தில் இந்த சிந்தனை பிறக்கிறதோ,அவன் தனக்காக அதிக செல்வம் தேடி அலைய மாட்டான்;அரசியலை நிச்சயம் ஒதுக்க மாட்டான்;ஊழல் போன்ற செயல்களை ஏற்க மாட்டான்.

இந்தியா என்றுமே வன்முறையை தூண்டும் பேச்சைக் கூட அனுமதித்ததில்லை. ஆனாலும் நம் சமூக அமைப்பில் உள்ள சிறுசிறு குறைபாடுகளே இன்று நம் புலம்பலுக்கு மூலக்காரணம். அதாவது இரண்டு தலைமுறையினருக்கு முன்பு வரை இவர் என் பக்கத்து வீட்டுக்காரர்; என் தெருக்காரர்; என் ஊர்க்காரர் என்று இருந்த குழும உணர்வு இன்று நகரத்து பரபரப்பு வாழ்க்கைக்கிடையே புதைக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கிடையே இருந்த பரஸ்பர அன்பு,நம்பிக்கை சிதிலமடைந்து போன நிலையில்,'யார் எப்படி போனால் என்ன?நம் வரை சந்தோஷமாக இருக்கிறோமா!' என்ற மனப்போக்குள்ள மனிதர்கள் மிகுந்து விட்டனர்.சமுதாய உணர்வு பிறக்குமிடம் இந்த குழும உணர்வுதான்.இந்த குழும உணர்வு முதலில் பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டும்.பள்ளியில் குழந்தைகள் ஒற்றுமையாகதானே இருக்கிறார்கள் என்று தோன்றலாம். 'இவன் என் சக மாணவன் ;கஷ்டப்படும் இவனுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்' என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.அரசாங்க ஊழியர்களும்,கல்லூரி மாணவர்களும் மாதம் ஒருமுறை சமூகம் சார்ந்த பணிகள் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.சின்ன சின்ன தவறுகளுக்காக அளிக்கப்படும் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்குப் பதிலாக இந்த சமூகப்பணிகளை செய்ய சொல்ல வேண்டும்.சுற்றியிருக்கும் மக்கள் படும் துயரங்களையும்,அவலங்களையும் மனிதனின் கவனத்துக்கு அடிக்கடி கொண்டு வரும்போது இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உண்டு;இது என் ஊர், என் மக்கள்,என் நாடு என்ற உணர்வு பிறக்க வழி ஏற்படுகிறது.

சரி...என்ன மாதிரி சமூகப் பணிகள் செய்ய வைப்பது?

பழுதடைந்த மாநகராட்சிப் பள்ளியை தூய்மைப் படுத்துவது,கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவது,வருடம் முழுதும் உழைக்கும் காவல்துறை மற்றும் ஆசிரியர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பது,முதியோர் மற்றும் அநாதை இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக புத்த்தகங்களை வாசிப்பது,அவர்களை மனம் விட்டு பேச வைப்பது இவையெல்லாம் கூட சமூகப் பணிகள்தான்!மனிதனை மனிதன் நேசித்து செய்யும் எந்த பணியும் சமூகப் பணிதான்!

இப்படிப்பட்ட பணிகளை செய்யத்தான் ஒருசில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்காமல் இளைஞர்கள் இத்தகைய பணிகளை செய்வார்களேயானால் , சதாசர்வகாலமும் மக்களின் பசி, வறுமையைப் பற்றி பேசுவது குறைந்து எதிர்காலத்தில்மக்களின் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று எண்ணும் அளவுக்கு நாடு வளர்ச்சியடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவை எதுவும் ஒருநாள் ஓரிரவில் ஏற்பட முடியாதுதான். ஆனால் ஏதேனும் ஒருகட்சியாவது ஒரு இளைஞனுக்காவது வாய்ப்பு கொடுத்தார்களேயானால் அதுவே நம் கனவிற்கு மிகப் பெரிய அடித்தளமாக அமையும். மேலும் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சுதந்திரத்தை கட்டுப்படுத்தி,'தேர்தலில் நிற்க குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பும்,மக்கள் நலப்பணியும் செய்திருக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.