திங்கள், 11 மே, 2009

கூட்டணி ஆட்சி

கூட்டணிக்கட்சி ஆட்சிமுறை என்பது நாடாளுமன்ற ஆட்சியின் ஓர் அங்கமாகி விட்டது.இக்கூட்டணிக் கட்சிமுறை ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து நாட்டின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவே உருவாக்கப்பட்டன.ஒரு கட்சி தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில்,அடுத்த பெரும்பான்மை கட்சிகளுடன்தொகுதி பங்கீடு செய்துகொண்டு ஆட்சி அமைக்கிறது.இதுநாள் வரை சுமார் 75% இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே(2004-ல் காங்கிரசு 26.53% வாக்குகளும்,1999- ல் பா.ஜ.க 23.75% வாக்குகளும்)ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன.

இந்தியாவில் மாநிலங்களிலும்,மத்தியிலும் கடந்த 20 வருட காலங்களாக இந்த கூட்டணி கட்சிமுறை நடந்து கொண்டிருக்கிறது.இந்தியா இனம்,மொழி,மதம் போன்றவற்றால் வேறுபட்டிருப்பதால்,வேறுபட்ட சிந்தனைகளையும் அடக்கிக் கொண்டுள்ளது.இந்த காரணத்தினாலேயே தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெரும் கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துவிடுகின்றன.
நிலையான கூட்டணி வைத்துக்கொள்ள அக்கட்சிகள் தங்களுடைய சிந்தனை மற்றும் கருத்துகளை சிறிதேனும் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது விட்டுக்கொடுத்து ஒத்துழைப்புத் தர வேண்டும்.அடுத்த கட்சிகளின் கருத்துக்களுக்கான விளைவுகளை நேரடியாக எடுத்துக் கூறும் ஆற்றல் வேண்டும்.ஆனால் இவை எதுவுமே இந்தியாவில் நடப்பதில்லை.இந்தியாவில் கூட்டணியிலுள்ள அரசியல் கட்சிகள்,எப்போதுமே ஆட்சி நடத்தும் கட்சியுடன்(அரசுடன்)ஒத்துப்போவதில்லை.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி விருப்பு,வெறுப்புகள்,நம்பிக்கைகள்!!எனவே ஒரு திட்டத்தைப் பற்றின மாற்றுக்கருத்து வரும்போது அவைக் கூட்டணியில் நிலைப்பதே கேள்விக் குறியாகிவிடுகிறது.அரசின் பொதுத் திட்டங்களில் உள்ள நன்மைகளை கூட அவர்களால் சில சமயங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.மத்தியில் காங்கிரசு கொண்டு வந்த இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தால் 'தடையற்ற மின்சாரம்' என்ற பலன் தெளிவாக தெரிந்தும்,'பாதுகாப்பின்மை'என்ற ஒரே காரணத்தை திரும்ப திரும்ப கூறிக் கொண்டு அதை எதிர்த்த இடது சாரிகள் இதற்கு சிறந்த உதாரணம்!

அதனால் கூட்டணி ஆட்சி முறையே நிலையாமையான ஒன்று எனக் கூறிவிடமுடியாது.1999- லிருந்து கடந்த பத்து வருடங்களாக தொடர்ச்சியாக நடந்து வரும் கூட்டணி அரசுகள் இதை உடைத்தெறிந்து விட்டன.கேரளாவிலும்,மேற்கு வங்கத்திலும் வெற்றிகரமான கூட்டணியே தொடர்கிறது.எதிர்ப்புகள் நிறைந்த சூழ்நிலையிலும் கூட்டணி முறையை வெற்றியாக்கிய இம்மாநிலங்களிடமிருந்து மற்றக் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டியதோ ஏராளம்!

உண்மை என்னவென்றால் இந்தியா கடந்த காலத்திலும் கூட்டணி முறையை பின்பற்றியது,இனி எதிகாளாத்திலும் அப்படியே!எனவே அரசியல் கட்சிகள் கூட்டணியை ஒரு விளையாட்டு போல் பார்க்கும் மனப்போக்கை விடவேண்டும்.

வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு,அது நிறைவேறியதும் வேறு ஒரு கட்சிக்கு மாறுவது தேர்ந்தெடுத்த மக்களை முட்டாளாக்கும் செயல்!வாக்காளர்கள் என்றுமே தேர்தலுக்கு முன் ஏற்படும் கூட்டணியையே விரும்புவர்,ஏனெனில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.ஆட்சிக்கு பிந்தைய கூட்டணியில் வாக்காளனின் முடிவு நிராகரிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை!

இதற்கு உதாரணமாக பா.ம.க கூட்டணி அமைக்கும் முறையைக் கொள்ளலாம்.

1998-ல் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றது.அந்த தேர்தலில் அ.தி.மு.க 28
இடங்களைப் பெற்றது.1999-ல் பா.ம.க, தி.மு.க அணிக்கு மாறியது,அந்த தேர்தலில் தி.மு.க 25 இடங்களைப் பெற்றது.2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அது அ.தி.மு.கவுடன் கூட்டணி கொண்டது.அந்த தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது.2004-ல் நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.கவுக்கு மாறியது.அப்போது தி.மு.க 39 இடங்களைப் பெற்றது.2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.கவிலேயே தொடர்ந்தது,தி.மு.கவும் ஆட்சிக்கு வந்தது.இப்போது 2009 நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.கவுக்குத் தாவி உள்ளது...?!

காங்கிரசோ,பா.ஜ.கவோ உருவாக்கும் அணிகள் தங்களது பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதற்கான கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று.அதனால்தான் 1999-ல் தி.மு.க பா.ஜ.க கூட்டணியிலான தலைமையிலும்,2004-ல் காங்கிரசு தலைமையிலான கூட்டணியிலும் பங்குபெற முடிந்தது.அந்த கூட்டணிகள் அரசியல் கருத்து அடிப்படையில் அமைந்தவை அல்ல,தலைமையை தக்க வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டவை!

இப்போதைய 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது காங்கிரஸ் எப்படி வெற்றியடைந்தது?மக்களுக்கு மன்மோகன் சிங்கின் மேல் உள்ள நம்பிக்கையா?காங்கிரஸ் குடும்பத்தாரின் மேல் உள்ள பாசமா?அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் பலமா?இவைதான் பெரும்பாலானோர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்விகள்.

உண்மையில் காங்கிரஸின் வெற்றிக்கு காரணம் கூட்டணிக் கட்சிகள்தான்.ஆனால் கூட்டணியின் பலத்தால் அல்ல;அந்தந்த கட்சிகள் தங்கள் அரசைக் காப்பாற்றிக் கொள்ள கொடுத்த விலையினால்.ஆம்!தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தி.மு.க தோற்றால்,மாநில ஆட்சியே போய்விடும் என்ற நெருக்கடியால் வென்றது.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் ச.ம.க.,நா.ம.க. மற்றும் ஜ.க. இந்த கட்சிகளின் பெயர்கள் கூட மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.தவிர தேசிய அளவில் பா.ஜ.க மத உணர்வை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது.'இந்து' என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்துவதால் இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடையாளமே சீர்கெடும். இதனால் மத,இனக் கலவரங்கள் கிளம்பி வன்முறை வெடிக்கும்.இதை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.மேலும் பா.ஜ.க 'ராமர் கோயில் கட்டுவது' என்பதை அதிமுக்கியமாக்கி இன்னபிற அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கை தயார் செய்தது. 1999 தேர்தலின் போதும் இதையே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றது.ஆனால் ஆட்சியில் அமர்ந்தபின், "எங்கள் ஆட்சி தனிப்பட்ட ஆட்சி அல்ல;தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி.அதனால் நாங்கள் கூட்டணி ஆட்சியின் ஆலோசனைப் படியும் நடக்க வேண்டும்" என்று கூறிவிட்டது.இது தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டது.பா.ஜ.க என்ன தேர்தல் அறிக்கை கொடுத்தாலும் அது நிறைவேறுமா என்ற சந்தேகத்தை மக்களிடையே உண்டு பண்ணியது.அடுத்து 2008 நவம்பர் மாத மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை வைத்தும் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. உண்மையில் 'பயங்கரவாதத்தை' பொறுத்தவரை இரு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றே!ஏனென்றால் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதுதானே நாடாளுமன்றத் தாக்குதல் நடைபெற்றது.எனவே இந்த கருத்தும் மக்களிடம் எடுபடவில்லை.

சரி.. அ.தி.மு.க கூட்டணிக்கு வருவோம்.

கடைசி நேரத்தில் அணி மாறிய பா.ம.க.,எத்தனை அவமானப் பட்டாலும் சீட்டிற்காக ஒட்டிக்கொண்டிருக்கும் ம.தி.மு.க.,போன ஆட்சியில் ஜெயலலிதாவை அவதூறு பேசிவிட்டு மூன்று சீட்டுகளுக்காக அணிமாறிய கம்யூனிஸ்டுகள் இவைதான் அ.தி.மு.கவின் கூட்டணி.இது தவிர தேர்தலில் வென்றால் காங்கிரசோடு பேரம்;படியாவிட்டால் பா.ஜ.க என்ற நிலையும் மக்களுக்குப் புரிய போக "அ.தி.மு.கவுக்கு வாய்ப்புகள் அதிகம்" என்ற தேர்தல் கருத்துக் கணிப்பு பொய்த்துப் போனது.

இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்;யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்;மந்திரி பதவியும் வாங்கிவிடலாம் என்ற நிலை உருவாகிவிட்டதால்,மூலைக்கு மூலை கட்சிகள்
உருவாகிவிட்டன.இதனால் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை உருவாகியது.உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் தே.மு.தி.க.,ஆந்திராவில் சிரஞ்சீவியின் கட்சி,பீகாரில் லாலு பிரசாத்!இவையும் கூட காங்கிரஸின் வெற்றிக்கு காரணம்.

இப்படி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அமைத்துக் கொண்டு வருகின்றன.அரசியல்வாதிகள் கட்சிதாவும்போது கூறும் சமாளிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு முறையான கூட்டணி மற்றும் வெற்றிகளைப் பெற்று மக்களுக்கு நலப்பணிகளை செய்வார்களா?

கூட்டணி முறையில் அளவுக்கதிகமாக விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதாக அரசியல் கட்சிகள் நினைக்கும்போதும் அரசு நிலையாமை ஏற்படுகிறது.அதன்பின் நாடாளுமன்ற தேர்தலை தவிர்க்க 'நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தீர்மானம்' இப்படி மாற்று வழிகளை இந்திய அரசு கையாள நேர்கிறது.ஆனால் தொகுதி இடைத்தேர்தல் தவிர்க்க முடியாததாகி விட்டது.எனவே பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு கட்சியிலிருந்து மறுகட்சிக்குத் தாவி,பின் இடைத்தேர்தலிலும் அதே தொகுதியை பெறும் அரசியல்வாதிகளுக்கு 'தேர்தல் செலவை ஏற்க வேண்டும்' என சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.அப்போதுதான் இந்த கட்சித் தாவும் அரசியல் முறை தீர்வுக்கு வரும்!

அரசியல் கட்சிகளும் கூட்டணி முறையை சுமூகமாக கொண்டு செல்ல நேரடியான சூத்திரங்கள் எதுவும் இல்லை என்பதை மனதில் கொண்டு அவர்களுடைய சிந்தனை மற்றும் கொள்கைகளை சிறிதேனும் மாற்றிக் கொண்டு கூட்டணியை நிலை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்யவேண்டும்!