பசிப்பிணித்தோனுக்கு ஒருவேளை சோறு
பணக்காரனுக்கு நிம்மதி
படித்தவனுக்கு திறமைக்கேற்ற வேலை
படிக்காதவனுக்கு வறுமைக்கேற்ற வேலை
தாழ்குலத்தோனுக்கு தனக்கும் அங்கீகாரம்
உயர்குலத்தோனுக்கு தனக்கான அங்கீகாரம்
குழந்தைக்கும் இளைஞனுக்கும் அனைத்துமே
முதியோருக்கு இறைவன் மட்டுமே!
இப்படி வாழ்வில் எல்லோரிடமும் தென்படுவது எதோ ஒன்றினைப் பற்றிய தேடல்!வாழ்வில் பிடிப்புள்ள எந்த ஒரு மனிதனும் தன்னை சுற்றி எதையோ தேடிக்கொண்டுதானிருக்கிறான். ஏன் வாழ்வில் பற்றற்றவர்கள் என்று சொல்லக்கூடிய முனிவர்களும்,சாமியார்களும் தன்னுள் உள்ள இறையை முழுமையாக உணரத் தேவையான ஞானத்தைத் தேடிதான் துறவியாகின்றனர்.தேடல் என்பது தன்னிடம் இல்லாததைத் தேடுவது மட்டுமல்ல;தன்னிடம் உணரப் படாதவற்றை தேடுவதும்தான்.
தேடலுக்கு 'எதிர்பார்ப்புடன் கூடிய உழைப்பு' என்றும் பொருள் கொள்ளலாம்.நாம் செய்யும் ஒவ்வொரு உழைப்பிலும் எதையாவது எதிர்பார்க்கிறோம்;நமக்கு தெரியாமலே ஒருவித எதிர்பார்ப்பு நம் முன்னே ஏற்பட்டுவிடுகிறது.நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவரிடமிருந்து பதில் அன்பை எதிர்பார்க்கிறோம்.குழந்தைகளிடம் தன் ஆசைப்படி நடக்க எதிர்பார்க்கிறோம்.வேலை செய்யும் இடத்தில் கூடுதல் சம்பளம்,பதவி உயர்வு,மரியாதை,கௌரவம் என எதையோ எதிர்பார்க்கிறோம்.இப்படி அன்பைத் தேடி,அதிகாரத்தைத் தேடி,பணத்தைத் தேடி,பதவியைத் தேடி,இன்பத்தைத் தேடி,இறையைத் தேடி என்று நிறைய எதிர்பார்ப்புகளுக்கிடையே தேடல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.இப்படி தேடல் எதிர்பார்ப்புகளுடனேத் தொடர்வதால் ஏமாற்றமும் ஏற்படுகிறது. ஏமாற்றத்தினால் தேடல் முடிந்து விடுவதில்லை.
தேடல் பற்று காரணமாகவும் தோன்றுகிறது.ஒரு விஷயத்தின் மேல் ஆசை அல்லது பற்று கொள்வோமேயானால் அதை அடையத் தேவையான வழித் தேடல் பிறக்கிறது.ஒருவன் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து ஆசை கொள்வானேயானால்,அதை வாங்குவதற்கு தேவையான பணத்தைத் தேடி சம்பாதிக்கிறான்.ஒருவன் பிறர் தன்னை விரும்ப வேண்டும் என ,ஆசைக்கொள்கிறான் எனில்,அவர்களைக் கவர்வதற்குத் தேவையான உத்திகளைத் தேடுகிறான்.பொருள்,செல்வம்,விருப்பு,வெறுப்புகளை துறந்தவர்கள் இறைவன் மீது பற்றுக் கொண்டு இறைவனைத் தேடி செல்கின்றனர்.ஆனால் அந்த ஆசை பேராசையாக இல்லாமல் அவசியமானத் தேவைகளுக்கானதாய் இருக்க வேண்டும்.நமக்கு அன்றாடத் தேவையான உணவைத் தேடுகிறோம்;உடையைத் தேடுகிறோம்;இருப்பிடத்தைத் தேடுகிறோம்;வருங்கால நன்மைக்காக செல்வத்தைத் தேடுகிறோம்.இப்படி ஒருவனுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் அங்கேத் தேடலும் பிறக்கிறது.
தேடல் தேவையின் அவசியமெனில் குழந்தைக்கு என்ன தேவை ?உணவும்,அம்மாவும்தானே என்று தோன்றலாம்.உண்மைதான்!அம்மா இருந்தாலே எப்பாடு பட்டேனும் தன் குழந்தைக்கு உணவு படைப்பாள்.இவைத்தவிர தன்னை சுற்றி உள்ள ஒவ்வொரு மனிதரையும்,ஒவ்வொரு பொருளையும் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் குழந்தைக்கு உண்டு ஆதலால்,குழந்தையும் அவற்றைப் பற்றி அறிய ஒருவிதத் தேடுதலை மேற்கொள்ளுகிறது.ஒருவர் புதிதாக தெரிந்தால் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொள்கிறது;குழந்தையின் அம்மா அவரை அறிமுகம் செய்து வைத்து அவரிடம் போகச் செய்கிறாள்;அப்படி அவரிடம் போகும்போது அவருடைய குனாதிசயத்தைத் தேட அல்லது அறிய முற்படுகிறது அக்குழந்தை எவ்வாறு?அவர் தன்னை கொஞ்சுகிறாரா?அல்லது 'உன் பெயர் என்ன?உன்னை தூக்கிப் போகட்டுமா?' என்று மிரட்டலோடு கூடிய கேள்விகளைக் கேட்கிறாரா? என்ற சோதனையுடன் அடுத்தமுறை அவரிடம் செல்வதை பற்றிய முடிவுகளை எடுக்கிறது.
ஒருவயதில் நடை பழகும் ஒருகுழந்தை விழுந்து விடுவோமென அஞ்சி நடக்காமலிருப்பதில்லை.தனியாக நடந்து விழுந்தால் எதையாவது தேடித் பிடித்துக் கொண்டு நடக்க முயற்சி செய்கிறது.அம்மா பிறரிடம் பேசும்போது தனக்கு எளிதாக வரக்கூடிய வார்த்தைகளை தேடித் பிடித்துக் கொண்டுவிடுகிறது.வீட்டில் புதிதாக ஒரு விளையாட்டு பொம்மையைப் பார்த்தால் அது என்ன?எப்படி நகரும்?தனக்கு எப்படி மகிழ்ச்சியளிக்கும்?என்றத் தேடலை மேற்கொள்கிறது.இப்படி ஒரு குழந்தைக்கே நிறையத் தேடல்கள் தொடரும்போது...ஒரு இளைஞனுக்கு என்னென்ன தேவைகளோ அவை எல்லாமே தேடல்கள்தானே!
பள்ளிக்கு செல்லும் குழந்தை எதைத் தேடுகிறது?முதலில் அம்மா,அப்பாவின் கட்டாயத்தின் பேரில் சென்றாலும்,அங்கு தனக்கான நண்பர்களைத் தேடிக்கொள்கிறது.பின்பு கற்பிக்கப்படும் பாடத்தில் கேள்விகள் கேட்பதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான 'இது ஏன் இப்படி இருக்கக் கூடாது?' என்றத் தேடலைக் கற்றுக்கொள்கிறது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, மாறுவேடப்போட்டி இப்படி ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்பதன் மூலம் தன்னுடைய திறமைகளைத் தேடுகிறது.தன்னுடைய திறமையைத் தேடி வெளிக்கொணர்ந்த பின் திறமைக்கான அங்கீகாரத்தைத் தேடுகிறது.
இப்படி தொடரும் தேடல்களில் முக்கியமாக என்னென்ன தேவைகள் ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படுகிறது என்று இந்த சராசரி மனிதனில் தோன்றியவையே இனி வரும் கட்டுரைகளில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக