செவ்வாய், 21 ஜூலை, 2009

திருமங்கலம்...தொடருமா?

லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழகத்தில் தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகியத் தொகுதிகளில் இடைத்தேர்தல் கலை கட்டியிருக்கும் இச்சமயத்தில்,திடீரென்று அ.தி.மு.க தேர்தல் புறக்கணிப்பு அறிவித்திருப்பது மக்களுக்கு சிறு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.காரணம்

1.எதற்கும் கலங்காத அ.தி.மு.க தலைவியா தோல்வி பயம் கொண்டிருப்பது என்பதும்,அடுத்து
2.தங்கள் வாக்குகளின் பண மதிப்பு குறைந்துவிடுமோ என்ற கவலையும்தான்.

உண்மைதான் !எதற்கும் கலங்காத ஜெயலலிதா ஏன் தேர்தலை புறக்கணித்தார்?

கடந்த 2008 டிசம்பர் மாதம் திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே! 'அதே வழியைத்தான் தி.மு.க லோக்சபா தேர்தலிலும் பின்பற்றியது;நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவும் அப்படியே இருக்கும்' என நினைத்து ஒதுங்க முடிவெடுத்தாரா?அல்லது தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்தால் தி.மு.கவின் ஏளனம் அதிகமாகும் என்று பின்வாங்கிவிட்டாரா?

எது எப்படி இருந்தாலும்,தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஜனநாயக முறையை அவமதிப்பது அல்லது அதற்கு மாறாக செல்வதையேக் காட்டுகிறது.அதெல்லாம் சரி...தேர்தல் ஜனநாயக முறைப்படியா தேர்தல் நடக்கிறது என்று கேட்கலாம்? 'ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது' என்று அறிக்கையும் விடலாம்.'தேர்தல் ஆணையமே பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறது' என்றும் கூறிக்கொள்ளலாம்.ஆனால் இதற்கு முன் பலமுறை மாநிலத்தை ஆட்சி செய்த ஒரு கட்சி எதிர்த்து நின்று போராடாமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் போது,"ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெற்றாலும் கூட மக்களுக்காக போராடப் போவதில்லை"என்பது தெள்ளத்தெளிவாகிறது.தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது, போரில் புறமுதுகிட்டு ஓடும் வீரனை விட கோழைத்தனமாகத் தெரிகிறது.அதற்கு பதிலாக உச்ச,உயர் நீதிமன்றங்களை நாடியிருக்கலாம்.அங்கு போனாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவான பதில்தான் வருமென்றாலும்,எறும்பு ஊரக் கல்லும் தேயுமல்லவா?நீதிமன்றங்களும் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல்,உண்மைக்குக் கட்டுப்பட்டு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை பாராட்டியே தீர வேண்டும்.காரணம் எம்.ஜி.ஆர் காலத்தில் பலமுறை தோல்வியைத் தழுவியவர்;ஐந்து முறை ஆட்சி அமைத்த பெருமைப் பெற்றும் ஒரு முறை மட்டுமே ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார் .இப்படி குறைகள் இருப்பினும் தேர்தலைப் புறக்கணிக்காமல் களம் கண்டவர்.மேலும் அவரைப் பற்றிக் கூற வேண்டிய இன்னொரு விஷயம் வெறும் இலவச அறிவிப்புகள் மூலமே வெற்றியடைய முடியும் என நிரூபித்தவர்.

மக்களிடமோ தேர்தல் என்றாலே தலைமை மாற்றம் குறித்து யோசிக்கும் மனநிலை மாறி,இந்தமுறை தங்கள் வாக்குகளுக்கு என்ன விலை தருவார்கள் என்ற யோசனைதான் அதிகமாகிவிட்டது.

அரசியல்வாதிகளும் "இந்த தொகுதி இந்த கட்சிக்குத்தான்!" என்ற நிலைப்பாடை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குகளுக்கு விலை கொடுக்கின்றனர்.எதிர்க்கட்சிகளோ அதே சூத்திரத்தை உடைத்தெறிய விலை கொடுக்கின்றன.இப்படி இருகட்சிகளும் கொடுக்கும் பணத்தை மக்கள் தராசில் வைத்து,அது எந்த பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கமே நியாயவாதியாகின்றனர்.

ஆனால் வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் புறக்கணிப்பால் அந்த தொகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வருவாயில் ஜெயலலிதா மண்ணை அள்ளி போட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.தி.மு.கவினருக்கோ அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.தேர்தல் ஆணையத்திற்கோ சிறிது தலைவலி குறைந்தது.இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அ.தி.மு.கவின் புறக்கணிப்பு தெரிந்தோ தெரியாமலோ விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உரமிடுவதாக அமைந்துவிட்டது.'2011- சட்டசபைத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமையும்' என கேப்டன் நம்ப ஆரம்பித்துவிட்டார்.அதுவும் சரிதான்....!எத்தனை நாளைக்குத்தான் இருகட்சி ஆட்சி முறையையே பார்ப்பது?அடுத்தவனுக்கும் வழிவிடுங்கய்யா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக